தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ஆள்மாறாட்டம் செய்த பெண் மற்றும்   அந்த பெண்ணுக்கு உடந்தையாக இருந்த பாஜக நிர்வாகியும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஐ.ஏ.எஸ். எனக்கூறி நெல்லை, தூத்துக்குடி எஸ்.பி.க்களை ஏமாற்ற முயன்ற வெளி மாநில  பெண் மற்றும் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்ட உள்ளனர்.  கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில், நெல்லை எஸ்.பி.யிடம் ஐ.ஏ.எஸ். எனக்கூறி தனக்கு வேண்டப்பட்டவருக்கு துப்பாக்கி லைசன்ஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

புன்னர், பிற்பகலில் தூத்துக்குடி மாவட்ட  காவல் அலுவலகத்தில்  நேற்று  (18.09.2024) பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர்களிடம் பண மோசடி தொடர்பாக புகார் அளிக்க வந்தார். அப்போது அந்தப்பெண் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும் உத்திரபிரேதசம் மாநில கல்விதுறையில் உதவி செயலாளராக (IAS) இருப்பதாகவும், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னிடம் பணத்தை வாங்கி கொண்டு அந்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும் புகாரளித்தார்.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்கள் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூலம் விசாரணை மேற்கொண்டதில் அவர் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியை சேர்ந்த மங்கையற்கரசி (44) என்பதும் கல்வித்துறை உதவி செயலாளர் என்று பொது ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்து பொது ஊழியரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதும் தெரியவந்தது.

மேலும் அவருடன் அவருக்கு உடந்தையாக வந்தவர் தாழையுத்து பகுதியைச் சேர்ந்த ரூபிநாத் (42) என்பதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. ரூபிநாத் பாஜக இலக்கிய அணியின் பொறுப்பாளராக இருந்து வருகிறார்.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து மங்கயைற்கரசி மற்றும்அவருடன் வந்த ரூபிநாத் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.