சென்னை: கள்ளச்சாராயத்தால் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோனதற்கு யார் பொறுப்பு? என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் விஷச் சாராயம் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் எத்தனை? என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் திமுக நிர்வாகி ஒருவர் பாக்கெட் சாராயத்தை தாராளமாக விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்து  நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது  கள்ளச்சாராயம் குடித்த 50 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற திபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ்  அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விழுப்புரம், மரக்காணம் சம்பவத்திற்கு பிறகு கள்ளச்சாராய விற்பனையை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?  என்றும்,  எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும்,   கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள கல்வராயன் மலை பகுதிகளில் அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் துணையோடு கள்ளச்சாராய விற்பனை என செய்தி வருகிறது. விற்பனை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு வந்தும் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன்?

கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தும் அப்பாவி உயிர்கள் பறி போயுள்ளது. இதற்கு யார் பொறுப்பு. இது தொடர்பாக, வரும் 26ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணையின்போது,  தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக இதுவரை  4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.  புகார்மீது நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சில உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.  தற்போதைய நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் கள்ளக்குறிச்சியில் 161 டாக்டர்கள்  ஈடுபட்டுஉள்ளனர்  என தெரிவித்தார்.