வாட்ஸ்அப் சமூக இணையதளம், தனிநபர் உரிமைகளில் தலையிடுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, ஏராளமானோர், வாட்ஸ்அப் செயலியில் இருந்து விலகி, டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளுக்கு மாறி வருகின்றனர். இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள வாட்ஸ்அப், தனது ஸ்டேட்டஸ் பாரில், `உங்கள் பிரைவசியை காப்பதே எங்கள் கடமை!’ என ஸ்டேட்டஸ் வைத்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்த செயலை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

வாட்ஸ்அப் அதன் பிரைவசி கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாகச் சமீபத்தில் அறிவித்தது. இப்படி தனியுரிமை கொள்கைகள் மாற்றப்படுகிறது எனப் பயனர்களுக்கு பாப்-அப் மெசேஜ் ஒன்றைக் சமீபத்தில் அனுப்பியது.
அதன்படி, வாட்ஸ்-அப்பில் பயனாளர்களின் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டு, வணிக நோக்கில் அந்த தகவல்கள் பேஸ்புக் போன்ற பிற நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளிக்காதவர்கள் பிப்ரவரி 8ம் தேதிக்கு பிறகு, வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதுதொடர்பான மெசேஜில் உள்ள ‘Agree‘ கொடுக்காமலிருந்தால் அடுத்த மாதம் முதல் வாட்ஸ்அப்பை உங்களால் பயன்படுத்த முடியாது என்று வாட்ஸ்அப் மிரட்டியது. இது உலகமெங்கும் வாட்ஸ்அப் உபயோகப்படுத்தி வரும் பயனர்களிடையே இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. . இதற்கு, கடும் கண்டனங்களும் எழுந்தன.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்கவும் இந்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்-அப் பயனாளர்கள் பலர், பிற செயலிகளபான சிக்னல், டெலிகிராம் போன்ற மாற்றுச் சேவைகளுக்கு மாறத்தொடங்கினர். 3 நாட்களில் 2.5 கோடி பயனர்களை வாட்ஸ்அப் இழந்ததுடன், அவர்கள் அனைவரும் அப்படியே டெலிகிராம் செயலிக்கு மாறினர். இதை பெருமையாக அறிவித்தது டெலிகிராம்.
இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளான, வாட்ஸ்அப் நிறுவனம், பயனர்களிடையே எழுந்துள்ள குழப்பங்களைத் தீர்க்கும் முயற்சிகளில் களமிறங்கியது. சமூக வலைதளம் மட்டுமின்றி பிரபல செய்தித்தாள்களிலும் விளம்பரம் வெளியிட்டது. அதுமட்டுமின்றி, புதிய பிரைவசி கொள்கைகள் குறித்து அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள் அடங்கிய ஒரு FAQ பக்கத்தையும் நிறுவியது. அத்துடன், புதிய பிரைவசி கொள்கைகளை மே மாதம் வரை ஒத்தி வைப்பதாகவும் அறிவித்தது.
இந்த நிலையில், வாட்ஸ்அப் தனது மை ஸ்டேட்டஸ் பக்கத்தில், `உங்கள் பிரைவசியை காப்பதே எங்கள் கடமை!’ என பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக பயனர்களிடம் எழுந்துள்ள பயத்தை நீக்க முடியும் என நம்புகிறது.
ஆனால், ஏராளமானோர் வாட்ஸ்அப்பில் இருந்து விலகிவிட்ட நிலையில், கடுமையான சரிவை சந்தித்துள்ள அந்நிறுவனம், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புமா என்பது கேள்விக்குறியே.
இந்த நிலையில்தான், `உங்கள் பிரைவசியை காப்பதே எங்கள் கடமை என ஸ்டேட்டஸ் போட்டுள்ளதற்கு நெட்டிசன்கள் பலரும் கேள்விகளை எழுப்பி கலாய்த்துவருகின்றனர்.