சென்னை: ‘ஆட்சியில் பங்கு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?’ என காங்கிரஸ் சட்டப்பேரவை முன்னாள் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவருமான கே.ஆர்.ராமசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றிருந்தாலும், அவ்வப்போது ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முதல் தொண்டர்களிடையே வலுத்து வருகிறது. ஆனால், சிலரின் சுயநலத்துக்காக காங்கிரஸ் கட்சி, திராவிட கட்சிகளை சுமந்து வருகின்றன. தமிழ்நாட்டில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தன்மானத்தை இழந்து சுமைதாங்கியாக திகழ்கிறது.
இந்த நிலையில், சமீபத்தில் கட்சியை தொடங்கி உள்ள விஜய், கூட்டணி ஆட்சி என்றும், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்றும் கொளுத்தி போட்டு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்த, கூட்டணிக்குகட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் அனைத்து கட்சிகளும் பேசத்தொடங்கி உள்ளன. இதனால், திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஏப்ரல் 14-ம் தேதி செல்வப்பெருந்தகையின் பிறந்த நாளுக்காக கட்சியின் மாநிலச் செயலாளர் ஷெரிப், ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு – 2026-ன் துணை முதல்வரே’ என போஸ்டர் அடித்து புரட்சி செய்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வப்பெருந்தகை, திமுகவிடம் தன்னை கோர்த்துவிட்டுவிட்டதாக எண்ணி, உடடினயாக மாநிலச் செயலாளர் ஷெரிப்புக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அது நகைப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நேற்று சென்னையில், சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பேசிய, காங்கிரஸ் சட்டப்பேரவை முன்னாள் தலைவரும், தற்போதைய , காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவருமான கே.ஆர்.ராமசாமி, ‘ஆட்சியில் பங்கு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?’ என்று கேள்வி எழுப்பியதுடன், “அப்படி போஸ்டர் அடித்ததில் என்ன தவறு இருக்கிறது?” என்று கேட்டிருக்கிறார். இது காங்கிரஸ் கட்சி தலைவர்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள கே.ஆர்.ராமசாமி, “நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அவர்கள் விருப்பத்தைச் சொல்கிறோம். எங்களுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என தெரிவிப்பதில் தவறில்லை. இதில் நாங்கள் பின் வாங்கவில்லை. காங்கிரஸ் மாநில தலைவரை, துணை முதல்வர் என ஷெரிப் வெளிப்படுத்தியது அவரது விருப்பம். இதற்கு நோட்டீஸ் அனுப்பத் தேவையில்லை என்பது எனது கருத்து. அதனால், நோட்டீஸ் அனுப்பியதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வில்லை.
கட்சியினரின் ஆர்வத்தை இப்படி ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்தால் கட்சியை வளர்த்தெடுக்க முடியாது. தொண்டர்களும் சோர்ந்து விடுவார்கள். ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரஸ் கட்சிக்கும் உரிமை இருப்பது நியாயம்தானே?
மீண்டும் நான் தேர்தலில் நிற்க வேண்டும் என்று சொன்னால் கட்சியில் எனக்கு சீட் கொடுத்துவிடுவார்கள். ஆனால், நான் கட்சியை வளர்க்க வேண்டும் என நினைக்கிறேன். அதற்காகத் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார் அவர்.
கே.ஆர்.ராமசாமி, மறைந்த ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில், சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர். மேலும், இவர் முன்னாள் மத்திய நிதி அமைச் சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.