மேற்குவங்கம்:
மேற்கு வங்க ஆளுநராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவி ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த ஆனந்த போஸ் பிரதமர் நரேந்திர மோடியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் முக்கிய மூளையாக இருந்தவராவார்.

மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸை நியமனம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கர் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து அவர் குடியரசு துணைத் தலைவராக கடந்த ஜூலை மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை அடுத்து ஜெகதீப் தங்கர் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பு தமிழகத்தை சேர்ந்த இல.கணேசனுக்கு வழங்கப்பட்டது. இல.கணேசன் ஏற்கனவே மணிப்பூர் ஆளுநராக பதவி வகித்து வரும் நிலையில் அவருக்கு மேற்கு வங்க ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக சி.வி. ஆனந்த போஸை நியமிக்கப்பட்டுள்ளார்.

சி.வி. ஆனந்த போஸ் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான இவர், மேகாலயா மாநில அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் இவரை தற்போது மேற்கு வங்க ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் திரளபதி முர்மு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.