டெல்லி: நேரம் வரும்போது பாஜக ஆட்சியை அகற்ற முயற்சி எடுப்போம்  என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பான ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அவரது இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய கார்கே,  பிஜேபி ஆட்சி அமையக்கூடாது என்ற மக்களின் விருப்பத்திற்கு உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நேரம் வரும்போது பாஜக ஆட்சியை அகற்ற முயற்சி எடுப்போம் என்றும்  கூறினார்.

இந்தஆலோசனை கூட்டத்தில் கார்கேவைத் தவிர, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மேலும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களான தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அபிஷேக் பானர்ஜி, ஆம் ஆத்மி சார்பாக சஞ்சய் சிங், ஜார்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரையும் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வரவேற்றார். தொடர்ந்து பேசிய அவர், “பாஜக மற்றும் நரேந்திர மோடிக்கு அரசியல் ரீதியான தோல்வியை மக்கள் அளித்துள்ளனர். பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப நேரம் வரும் போது பாஜக கட்சியை அகற்ற முயற்சி எடுப்போம். பாஜக கட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும்.

இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு பொதுமக்கள் அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி. மேலும், அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.