சென்னை: ஜூன் மாதம் பள்ளி பேருந்துகளை இயக்க மாட்டோம் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜிபிஎஸ் கருவிகளை அதிக விலைக்கு குறிப்பிட்ட நிறுவனத்திடம் மட்டுமே வாங்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தனியார் பள்ளி, கல்லூரிகள் சங்கம் போர்க்கொடி தூக்கி உள்ளது.

தமிழகத்தில் பள்ளி வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்த வேண்டும் என அரசு உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ள நிலையில் ஜிபிஎஸ் பொருத்துவதில் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக தனியார் பள்ளிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதையடுத்து, ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாநிலம் முழுவதும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளை இயக்கப் போவதில்லை எனத் தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் கல்வி நிறுவன வாகனங்களை இயக்கப் போவதில்லை எனப் பள்ளிகள் சங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 1 லட்சம் பள்ளி, கல்லூரி பேருந்துகள் இயக்கப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான சுமார் 80,000-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் பயண நிகழ்நேரத்தைக் (Real-time) கண்காணிக்கவும் ஜிபிஎஸ் (GPS) கருவிகளைப் பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வாகனங்கள் அதிவேகமாகச் சென்றாலோ அல்லது அனுமதிக்கப்பட்ட பாதையை விட்டு மாறினாலோ எச்சரிக்கை செய்யும் வசதி கொண்ட இந்தத் திட்டம் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இதனை அமல்படுத்துவதில் அதிகாரிகள் காட்டும் கெடுபிடிதான் தற்போதைய மோதலுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
சந்தையில் வெறும் ரூ.3,000 மதிப்பைக் கொண்ட ஜிபிஎஸ் கருவிகளை, சுமார் ரூ.18,000 கொடுத்து வாங்குமாறு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வற்புறுத்துவ தாகத் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட எந்தவொரு ஜிபிஎஸ் கருவியையும் பொருத்திக் கொள்ள அனுமதிக்காமல், அதிகாரிகள் குறிப்பிட்ட சில தனியார் ஏஜென்சி களிடம் இருந்து மட்டுமே கருவிகளை வாங்க வேண்டும் என நெருக்கடி கொடுப்பதாகப் பள்ளிகள் சங்கம் கூறுகிறது.
தகுதிச் சான்றிதழ் முடக்கம்: அதிகாரிகளின் பேச்சைக் கேட்க மறுக்கும் பள்ளிகளின் வாகனங்களுக்கு, ஆண்டுதோறும் வழங்கப்படும் தகுதிச் சான்றிதழை (FC) வழங்க மறுத்து இழுத்தடிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாகத் தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதலமைச்சருக்குத் தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் புகார் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த புகாரின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை இயக்காமல் முடக்கி வைக்கப் போவதாகச் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும், அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (RTO) முன்பாகக் கண்டனப் போராட்டங்களை நடத்தவும், நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக வழக்கைத் தொடரவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]