சென்னை: ஒண்டிவீரனின் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 254வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர்கள், திமுகவினர் என பலரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த நிலையில், ஒண்டிவீரனின் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதவில், ஆங்கிலேயருக்கு நெல்லைக் கப்பமாகக் கட்டமறுத்து, நெற்கட்டும்செவலை நெற்கட்டான்செவலாக மாற்றி, அந்நிய ஆதிக்கத்திற்குச் சவால் விட்ட தென்மலைப் போரின் மாவீரர் ஒண்டிவீரனின் நினைவுநாளில் அவருக்கு என் வீரவணக்கம். சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலை உணர்வோடு தென்தமிழ்நாட்டின் தீரர்களான பூலித்தேவனும் படைத்தளபதி ஒண்டிவீரனும் போர் செய்தனர் எனும் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஒண்டிவீரன் சிலைக்கு மரியாதை செய்த சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர்கள் படத்தையும் வெளியிட்டுள்ளார்.