டெல்லி: உலக கோப்பை டி20 தொடருக்கு பிறகு டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி திடீர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.  மற்ற போட்டிகளில் கவனம் செலுத்தும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வந்த மகேந்திர சிங் தோனி 2014 ஆம் ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து  விலகியதை அடுத்து, விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில்,  ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளுக்கும் இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக உள்ளார். கேப்டன் விராட் கோலி மூன்று விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

சமீப காலமாக அவரது ஆட்டம் கடுமையான விமர்சனங்களை கொடுத்து வருகிறது.  கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் எந்த போட்டியிலும் சதம் அடிக்கவில்லை. அதுமட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் ரன் எடுக்க சிரமப்படுகிறார். கோலி தனது  பேட்டிங்கில் தடுமாறுவதாக முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். கேப்டன் பதவி ஏற்ற பிறகு, விரோட் கோலி ஒரு ஐசிசி தொடரை ஒருமுறை கூட வெல்லவில்லை என்று குற்றம் சாட்டப்படுவதுடன், டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு ரோகித் சர்மாவிடம் கேப்டன் பதவி அளிக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் கூறிவருகின்றனர்.

 

இந்தநிலையில், உலக கோப்பை டி20 தொடருக்கு பிறகு டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக, விராட் கோலி அறிவித்துள்ளார். ஒருநாள், டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் கவனம் செலுத்தும் வகையில் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தனது முடிவு குறித்து,  பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, மற்றும் தலைவர் கங்குலியிடம் தெரிவித்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.  மேலும், இந்திய டி20 அணியில் பேட்ஸ்மேனாக தொடர்ந்து திறம்பட செயல்படுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலக உள்ளதாக தகவல்கள் பரவின. அதை பிசிசிஐ மறுத்து வந்தது. இது, தவறானத் தகவல் எனத் தெரிவித்துள்ள பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியதுடன்,  ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகளுக்கு விராட் கோலியே தொடர்ந்து கேப்டனாக நீடிப்பார் என்று கூறியிருந்தார்.

இநத் நிலையில், துபாயில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கு பின், டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.