டெல்லி: தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ந்தேதி  நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக, தி.மு.க.,வை சேர்ந்த புகழேந்தி இருந்தார். இவர் உடல் நலக்குறைவால் ஏப்ரல் 6-ந் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடந்தது. அத்துடன் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகே அறிவிக்கப்படும் என கூறியது.

இநத் நிலையில்,  தமிழ்நாட்டின்   விக்கிரவாண்டி தொகுதி  உள்பட நாடு முழுவதும்  13 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூலை 10ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  அதன்படி, பீகார், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கஎன இடைத்தேர்தல்  தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதி தொடங்கும் என்றும், ஜூலை 10ந்தேதி வாக்குப்பதிவு,  தேர்தல் முடிந்து ஜூலை 13ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.