சென்னை: ஈரோட்டில் இன்று விஜய் பொதுக்கூட்டம்  நடைபெறுகிறது. இதையொட்டி, போலீசார் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி இருப்பதுடன், பல இடங்களில் கெடுபிடி செய்வதாக தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிகளில்  பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தவெக தலைவர் விஜயின் கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்தை தொடர்ந்து அவரது பிரசாரத்துக்கு தமிழ்நாடு அரசு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. தமிழக அரசின் கெடுபிடியால்,  சமீபத்தில் பொது இடத்தில் பேச முடியுமல் காஞ்சீபுரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு பேசினார். அதற்கு அடுத்தபடியாக புதுச்சேரியில் கடந்த 9-ந் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று தொண்டர்கள் மத்தியில் பேசினார். இந்த நிலையில் கரூர் சம்பவத்துக்கு பின்னர், தமிழ்நாட்டில் விஜய் கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டமாக ஈரோடு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் இன்று த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.‘ சுமார் 80 ஏக்கர் அளவில் உள்ள  இடத்தில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில்,  60 ஏக்கரில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தம், 20 ஏக்கரில் 2 சக்கர வாகனங்கள் நிறுத்தம் என வாகன நிறுத்தத்துக்காக மட்டும் 80 ஏக்கர் பரப்பளவில் இடம் தயார் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது.

இதையொட்டி அதிகாலை முதலே   தொண்டர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.  தவெக தொண்டர்கள் அமர கூண்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதை தாண்டி செல்லவோ, வேறு எங்கும் போகவோ முடியாத படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் மருத்துவ வசதி, கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

இந்த பொதுகூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க  சென்னையில் இருந்து விமானத்தில் கோவை விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வருகிறார். அங்கு பிரத்தியேக பிரசார வாகனத்தில் நின்று கொண்டு பொதுமக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் பேசுகிறார்.

இந்த நிலையில், தவெக பொதுக்கூட்டத்தையொட்டி,  ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் நெரிசலை குறைக்கவும், தொண்டர்கள் பொதுமக்கள் சரியாக வாகன நிறுத்தம் பகுதிக்கு வந்து பொதுக்கூட்ட மைதானத்துக்கு வரும் வகையில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

[youtube-feed feed=1]