விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வந்த உலகநாயகன் கமலஹாசன் அதிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.

2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 7 சீசன் முடிவடைந்துள்ளது.

தற்போது 8வது சீசன் தொடங்க உள்ள நிலையில் கமலஹாசன் வெளியேறுவதாக வெளியான அறிவிப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

அதேவேளையில், பிக் பாஸ் சீசன் 8ஐ யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற மில்லியன் டாலர் கேள்வி தமிழக மக்களிடையே பரவலாக எழுந்தது.

சிம்பு, விஜய் சேதுபதி, சூர்யா, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோரது பெயர்கள் சமூகவலைத்தளத்தில் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை தொகுத்து வழங்கப் போகிறார் என்ற அறிவிப்பை நிகழ்சசி தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

சினிமாவில் நடிப்பதற்கு ரூ. 35 கோடி சம்பளம் வாங்குவதாகக் கூறப்படும் விஜய் சேதுபதிக்கு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதைவிட கூடுதல் தொகை கொடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதியை வைத்து அண்மையில் பாண்டிச்சேரியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ சூட் நடைபெற்ற நிலையில் விரைவில் பிக் பாஸ் சீசன் 8 தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.