டில்லி:

லண்டனில் இருந்து இந்தியாவுக்கு தொழிலதிபர் மல்லையா நாடு கடத்தப்பட்டால், அவரை மும்பை, ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா கிங்பிஷர் விமான சேவை நிறுவனம் தொடங்க பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தவில்லை. அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வங்கிகள் வழக்கு தொடர்ந்தன.

கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டதால் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்றார். மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரி மத்திய அரசு பிரிட்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. லண்டன் நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமின் வழங்கியது.

அவரை நாடு கடத்தக்கோரும் மனு மீதான விசாரணை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் டிசம்பர் 4ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது மல்லையாவை நாடு கடத்தினால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், இந்திய சிறைகளில் மனித உரிமை மீறல்கள் அதிகளவு நடப்பதாக அவரது வக்கீல் வாதிட்டார்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘‘மல்லையா நாடு கடத்தப்பட்டால், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஆர்தர் சிறையில் அடைக்கும் திட்டம் உள்ளது. சிறையில் அடைக்கப்படும் நபர்களை பாதுகாப்பது மாநில அரசின் கடமையாகும். தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக மல்லையா கூறுவது தவறான தகவல்.

இந்திய சிறைகள், இதர நாடுகளின் சிறைகளை விட சிறந்தது. சிறை கைதிகளின் உரிமைகளும் முழு அளவில் பாதுகாக்கப்படுகிறது. மும்பை சிறையில், கைதிகளுக்கு சிறந்த மருத்துவ வசதிகள் உள்ளன. முழு பாதுகாப்புடன் மல்லையா அங்கு இருப்பார். இந்தியாவில் நடக்கும் வழக்குகளில் இருந்து தப்பிக்கவே உயிருக்கு ஆபத்து. மனித உரிமை மீறல் என மல்லையா பொய் சொல்கிறார் என இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவிக்கவுள்ளோம்’’ என்றனர்.

[youtube-feed feed=1]