சென்னை

வெ க கொடியில் உள்ள யானை சின்னம் குறித்து நடிகர் விஜய் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் புதிய கொடியை கடந்த 22  ஆம் தேதி சென்னையில் அறிமுகப்படுத்தினார். இந்தக்கொடி சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்துடன் நடுவில் 2 யானைகளுக்கு மத்தியில் வாகைப்பூ கொடியில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது குறித்த விளக்கத்தை அடுத்த மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில் விளக்கி பேசுவதாக விஜய் அறிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் கமிஷனிடம் அளித்த புகார் மனுவில்,

”அங்கீகாரம் பெற்ற எங்கள் கட்சியின் தேர்தல் சின்னமான யானை சின்னத்தை இந்தியா முழுவதும் கொடியிலும் பயன்படுத்தி வருகிறோம். யானை சின்னம் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாக உள்ளது.

ஆனால் தற்போது புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் விஜய் தனது கட்சி கொடியில் யானை உருவத்தை பயன்படுத்தி உள்ளார்.

இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தும் எந்த பதிலையும் விஜய் எங்களுக்கு தராமலும் நீக்குவதற்கான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருக்கிறார். உடனடியாக சட்டவிரோதமாக விஜய் கட்சி கொடியில் உள்ள யானை உருவத்தை அகற்ற வேண்டும்”

எருகூறப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்திஎடுக்கப்பட்ட முடிவில், பகுஜன் சமாஜ் கட்சி புகாருக்கு தேர்தல் கமிஷனிடம் இருந்து விளக்கம் கேட்டு முறைப்படி கடிதம் வந்தால் அதற்கு தகுந்த விளக்கம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஒருவர்

”கட்சி சின்னத்தைதான் வேறொருவர் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் விதி இருக்கிறது. எங்கள் கட்சி கொடியில் யானைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது எந்த கட்சி சின்னத்துடனோ கொடியுடனோ பொருந்தாது. தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினால் தகுந்த விளக்கத்தை அளிப்போம்”

என்று தெரிவித்துள்ளார்.