உறவுகள் – கவிதை பகுதி 7
வேங்கை மை
பா. தேவிமயில் குமார்
எப்போது தான்
என்னைத் தேடி
வருவாய் ?
எதிர்பார்ப்பில்,
என் காலங்கள்
ஏக்கத்தில்
என் கனவுகள்
என……
கழிகிறது வாழ்க்கை !
உன்னை ஏந்திட
என்
கருப்பையும், இரு
கைகளும்
காத்துக்கிடக்கிறது
காலம் காலமாய் !
எதிர்காலம்
என்பது
எனக்கு
எதுவுமில்லை,
உன்னைத் தவிர !
காசும் பணமும்
கௌரவமும்,
வீடும்,
வாசலும்,
எதுவுமே
எனக்கு பெரிதாக
தெரியவில்லை !
உன்னைத் தவிர !
என்
ஏக்கமும்
துக்கமும்
உன்னைத்
தூக்கிக்கொஞ்சும்
நாளில் தான்
தூரம் போகும் !
எங்கோ
ஒரு
குழந்தை அழும்
குரல் கேட்டால்
நான் குலுங்கி அழுவதை
நீ அறிவாயா ?
வளைகாப்பிலும்
விழாக்களிலும்
ஒதுங்கி நின்றே
ஓய்ந்து விட்டது
என் மகிழ்ச்சி !
என்பதை அறிவாயா ?
குருவியும்
குளவியும்
கூடுகட்டுகிறது
நம் வீட்டில் !
நீ எப்போது
என்
கருப்பையெனும்
கூட்டிற்கு வருவாய் ?
ஆண் குழந்தையோ
பெண் குழந்தையோ
நீ என்
குழந்தையென,
குதூகலமாய்
கூற வேண்டும் !
உன்னை
என் இடுப்பில்
சுமந்தபடி
சந்தோஷமாய்
இந்த
உலகத்தையே
ஒரு சுற்று வர வேண்டும் !
என் வயிற்றை
உன் கால்களால்
உதைத்திடு !
ஒவ்வொரு நாளும்
உன்னை
எனக்குள்
உணர வேண்டும் !
உருக வேண்டும் !
வேண்டாத
தெய்வமில்லை,
வேண்டுதலுக்கும்
பஞ்சமில்லை,
வைத்தியமும்
கொஞ்சநஞ்சமல்ல,
பத்தியமிருந்து
பார்த்துவிட்டேன்,
பட்டினி கிடந்தும்
பார்த்துவிட்டேன்,
பழங்கள் உண்டும்
பார்த்து விட்டேன்,
இன்னும் நீ
ஏன் வரவில்லை ?
நானும்
உன் அப்பாவும்
இப்போதெல்லாம்
நீ எப்போது
வருவாயென ?
வாழ்க்கையை
ஓட்டிக்கொண்டிருக்கிறோம் !
ஆயிரம்
கவலைகளை
களிப்பாக்கிட
கனவுகளை
நனவாக்கிட
நறு மலரே வந்துவிடு !
பிரசவ வலியைவிட
பெரிய வலி
இல்லையாம் !
யார் சொன்னது ?
என்னைப் போல
குழந்தைக்கு ஏங்கும்
அம்மாக்களிடம்
கேட்டுப்பார் !
அதைவிட பெரிய
வலிகளை
வார்த்தைகளிலே
அனுபவித்து
விட்டேன் !
அரைஞாண் கயிறும்,
அழகு ஆடைகளும்,
கொஞ்சும்
கொலுசுகளும்,
வெள்ளெருக்கு
வளையமும்,
வேங்கை மையும் ,
விளையாட்டு பொம்மைகளும்,
உனக்காக
இங்கே காத்திருக்கிறது
வந்து விடு என்
வண்ணக்கிளியே !
கனவுக்
குழந்தையாகவே
இருந்து விடாதே ! உன்
கண் பார்த்து,
கை தொட்டு,
உன் உச்சி முகர,
உன் உள்ளங்கை பிடிக்க,
ஒவ்வொரு நாளும்
காத்திருக்கிறேன் !
காலம் கடத்தாதே !
வந்து விடு கண்ணே !
உன் வரவை
வார்த்தையில் அல்ல – என்
வயிற்றில் எதிர்பார்க்கிறேன்
வந்து விடு வண்ணக்கிளியே !
– இப்படிக்கு
குழந்தைக்காக ஏங்கும்
ஒரு தாய்