சென்னை: சென்னை உள்பட  மாநிலம் முழுவதும் 50இடங்களில் நாளை ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்டம் தொடங்கப்பட இருப்பதாக சுகாதாரத்துறை  அமைச்சர் ர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த வருமுன் காப்போம் திட்டம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதும் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. செப்டம்பர் 29ந்தேதி அன்று சேலம் அருகே வாழப்பாடியில் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து, இந்த திட்டத்தின் விரிவாக்கம்,  தமிழகம் முழுவதும் தொடங்கப்பட உள்ளது.

அதன்படி சென்னையில் 2 இடங்களில், மாநிலம் முழுவதும் 50 இடங்களிலும் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கப்படும் என  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியளார்களை சந்தித்த அமைச்சர்,  தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வருமுன் காப்போம் திட்டத்தின்படி, மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும்  50 இடங்களில் நடைபெறவுள்ள இந்த முகாம், நாளை காலை 9.30 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 4 மணி வரை நடைபெற உள்ளது. சென்னையில் 2 இடங்களிலும் நடைபெற உள்ளது.

இந்த முகாமில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை நலம், மகப்பேறு மருத்துவம், ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, சளி பரிசோதனை, மலம் பரிசோதனை, கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை மற்றும் கோவிட் -19 தடுப்பூசியும் வழங்கப்பட இருக்கிறது. மருத்துவத்துறையின் செயல்பாடுகள், விழிப்புணர்வு என்கிற வகையில் 20-க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன.

மேல் சிகிச்சைகள் தேவைப்படுவோர் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். முதலமைச்சரின் காப்பீடு திட்டத்துக்கான அட்டைகளும் இம்முகாம்களில் வழங்கப்படவிருக்கின்றன என்றார்.

தமிழ்நாட்டில் இதுவரை  கோவாக்சின் தடுப்பூசிகள் 6 லட்சம் பேரும், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் 19 லட்சம் பேரும் என மொத்தம் 25 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போடாமல் இருந்தனர். தொலைக்காட்சி, பத்திரிகைகள் மூலம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, நேற்று 11 லட்சத்து 2 ஆயிரம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இன்று மட்டும் தடுப்பூசி செலுத்துவதற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை வழக்கம் போல் தடுப்பூசி மையங்கள் செயல்படும்.

தமிழகத்தின் முதல்வர் மட்டும்தான் தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு ஊக்கமும், விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.

மருத்துவக் கல்லூரிகளில் 850 மருத்துவ இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 800 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இடங்களுக்குத்தான் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறும் கட்டுமானங்களை மருத்துவக் கல்லூரி இயக்குநர் தலைமையில் டெல்லிக்குச் சென்று ஆவணங்களைச் சமர்ப்பித்திருக்கிறார்கள். அவற்றில் நான்கு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆய்வுக்கு வரச் சொல்லியிருக்கிறோம். அவர்களும் வருவதாக உறுதியளித்துள்ளார்கள்.

மழைக்கால நோய்களான சளி, காய்ச்சல், சேற்றுப்புண் இவற்றுக்காகத்தான் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு அருகே நடத்தப்படும் முகாம்களுக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

திமுக ஆட்சிக் காலத்தில் ஏற்கெனவே மழைக்காலங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதுண்டு. கடந்த 10 ஆண்டுகளாக அம்முகாம்கள் நடைபெறவில்லை. பட்ஜெட்டில் அறிவித்தவாறு மழைக்காலங்களில் மருத்துவ முகாம்கள் இனி நடத்தப்பட இருக்கின்றன.

இவ்வாறு கூறினார்.

இன்று வாழப்பாடியில் வருமுன் காப்போம் திட்டத்தைத் தொடங்கும் முதல்வர்