டில்லி:

நாட்டிலேயே அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலங்களில், முதலாவது இடத்தில் பாஜக ஆட்சி செய்யும் உ.பி. மாநிலம் உள்ளதாக மத்தியஅரசு நிறுவனமான தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி)  தெரிவித்து உள்ளது.

எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக குற்றச்சாட்டுகளை கூறும்போது மறுத்து வந்த மத்திய மாநில அரசுகள் தற்போது மோடி அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம், உ.பி.யின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி உள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி / National Crime Records Bureau (NCRB)  நேற்று முன்தினம் (அக்டோபர் 21ந்தேதி) கடந்த 2017ம் ஆண்டுக்கான குற்றவியல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் மாநிலங்களில் நடைபெறும் குற்றவியல் தொடர்பாக தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

நாடு முழுவதும் குற்றங்களை கண்காணிக்கும் (National Crime Records Bureau) தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2017 ஆம் ஆண்டுக்கான தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த  2016 ம் ஆண்டு உடன் ஒப்பிடும்போது 2017-ல் நாட்டில் கொலை வழக்குகள் குறைந்துள்ளதாக தெரிவித்து உள்ளன.  அதே நேரத்தில் 2017-ல் நாட்டில் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

2016 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 30,450 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 2017 ஆம் ஆண்டில், 28,653 கொலை வழக்குகள் என 5.9 சதவீதம் குறைந்துள்ளன.

2016 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 88008 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்து 2017 இல் 95,893 ஆக பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 2017ம் ஆண்டில் 1,78,836 வழக்குகள் பதிவாகியுள்ளன. அது 2016 ஆம் ஆண்டில் 1,79,896 வழக்கு களாக இருந்தது.  சுமார் ஆயிரம் வழக்குகள் குறைந்துள்ளது.

என்சிஆர்பி அறிக்கையின்படி, நாட்டில் அதிக கடத்தல் சம்பவம் நடைபெற்ற மாநிலம்  பாஜக ஆட்சி செய்யும் உத்தரபிரதேசம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு 2016ம் ஆண்டு 15,898 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2017ம் ஆண்டில் 19,921 வழக்குகளாக அதிகரித்துள்ளது, அதாவது 2017 ல் 4023 கடத்தல் வழக்குகள் அதிகரித்துள்ளன, இது நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட மொத்த கடத்தல் வழக்குகளில் 20.8 சதவீதமாகும். 

இதையடுத்து 2வது இடத்தை பிடித்துள்ளதும் பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலம்.  அங்கு 10324 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து அசாம் பீகார் போன்ற மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

நாட்டின் தலைநகரான டெல்லியில் கடத்தல் வழக்குகள் 2016 உடன் ஒப்பிடும்போது குறைந்துவிட்டன. 2016ம் ஆண்டில், டெல்லியில் 6619 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது 2017 இல் 6095 ஆகக் குறைந்துள்ளது.

அதுபோல குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 28 சதவீதம் அதிகரித்து உள்ளதாக என்.சி.ஆர்.பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி கடந்த 2016ம் ஆண்டில் குழந்தைகள் மீது 1,06,958 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவை 2017-ல் 1,29,032 ஆக அதிகரித்துள்ளன.

குழந்தைகளுடனான குற்றங்களிலும்  உ.பி. முதலிடத்தில் உள்ளது.  அங்கு 2016 ஐ விட 19 சதவீதம் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன.

அதற்கு அடுத்த இடத்தில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

சைபர் கிரைமில் கூட, உத்தரபிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான குற்றங்கள் நடந்துள்ளன. 2016 ஆம் ஆண்டில் சைபர் கிரைம் வழக்குகள் 2639 ஆக பதிவு செய்யப்பட்ட நிலையில், 2017 ஆம் ஆண்டில் உ.பி.யில் 4971 சைபர் கிரைம் வழக்குகள் பதிவாகியுள்ளன, இது 2016 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது கிட்டத்தட்ட இரு மடங்காகும்.

இரண்டாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் 3604 சைபர் கிரைம் வழக்குகளை பதிவாகி உள்ளது. கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி செய்திகளைக குறித்து என்.சி.ஆர்.பி தகவலின் படி, 2017ல் 257 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதில் மத்தியப் பிரதேசம் 138 வழக்குகளில் முதலிடத்தில் உள்ளது. 32 வழக்குகளுடன் உ.பி. இரண்டாவது இடத்தில் உள்ளது. 18 வழக்குகளில் கேரளா மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்த தகவலை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிவித்து உள்ளது.

Uttar Pradesh is No.1 State  in crimes against women, cyber crime, child crime all over india,  says NCRB report