வாஷிங்டன்: ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி ஜார்ஜ் ஹோல்டிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரை, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. அதற்கான துணை நிலை ஆளுநர்களும் நியமிக்கப்பட்டனர்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத இயக்க தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். ஆனால் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டதாக மத்திய அரசு கூறி வருகிறது.

இந் நிலையில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப் பட்டதற்கு அமெரிக்க குடியரசு கட்சி எம்பி ஜார்ஜ்  ஹோல்டிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்று இந்திய பிரதமர் மோடி தலைமையிலான அரசு நம்பிக்கை கொண்டிருக்கிறது. மோடியும், இந்திய நாடாளுமன்றமும் எடுத்த இந்த நடவடிக்கை ரொம்ப அவசியமானது.

அதை பாராட்ட வேண்டும். சிறப்பு சட்டம் 370வது பிரிவால் மக்களுக்கு எவ்வித பொருளாதார பலன்களும் கிடைக்கவில்லை. பிரிவினையை ஏற்படுத்தியது. தீவிரவாத தாக்குதல்ளை ஊக்குவித்தது.

மத்திய அரசின் இந்த சீர்திருத்தத்தால், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் களையப்படும். ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி பெற, அங்கு அமைதி நிலவ வேண்டும் என்றார்.