டெல்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சியின் தலைவராக இருந்து வரும்  மனோஜ் சோனி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனோஜ் சோனியின் பதவிக்காலம் வரும் 2029ஆம் ஆண்டு மே மாதம் வரை, அதாவது மேலும் 5 ஆண்டுகள் உள்ள நிலையில், அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் நிலையில், திடீரென ராஜினாமா செய்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி ள்ளது.

யுபிஎஸ்சியின் தலைவராக இருந்த  மனோஜ் சோனி த கடந்த 2017ஆம் ஆண்டு யுபிஎஸ்சியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு, பின்னர், கடந்தாண்டு,  (2023ஆம் ஆண்டு)  மே 16ஆம் தேதி யுபிஎஸ்சி   அமைப்பின் தலைவரானார். அவரது பதவிக்காலம் வரும் 2029ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேவேளையில்,  அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது குறித்த எந்தவொரு தகவலையும் குடியரசு தலைவர் மாளிகை வெளியிடவில்லை.

இதற்கிடையில், தனது ராஜினாமா தனிப்பட்ட காரணங்களுக்கான கூறியுள்ள மனோஜ் சோனி,  தான்,  குஜராத்தில் உள்ள சுவாமிநாராயண் பிரிவின் கிளையான அனூபம் மிஷனில், தொண்டு செய்வதில் அதிக நேரம் செலவிட விரும்புவதாகதெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக கருதப்படும் மனோஜ் சோனி கடந்த 2005ஆம் ஆண்டில் 40 வயதாக இருந்த போது குஜராத் மாநிலம் வதோதராவின் புகழ்பெற்ற எம்எஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அதன் மூலம் நாட்டின் இளம் வயது துணை வேந்தர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். தொடர்ந்து 2017ஆம் ஆண்டு யுபிஎஸசி உறுப்பினராக அவர் அறிவிக்கப்பட்டார். இதனிடையே மனோஜ் சோனி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களில் மூன்று முறை துணை வேந்தராக பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. யுபிஎஸ்சி அமைப்பை பொறுத்தவரையில் தலைவர் மற்றும் அதிகபட்சமாக 10 பேர் கொண்ட உறுப்பினர் அமைப்பாக இயங்கி வருகிறது. தற்போது யுபிஎஸ்சி அமைப்பில் 7 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் தான் மனோஜ் சோனி பதவி விலகி இருப்பது கூடுதல் சர்ச்சையை கிளப்பி உள்ளது.