டெல்லி: ஆதார் அட்டையை புதுப்பிக்க பொதுமக்களுக்கு செப்டம்பர் 14ந்தேதி வரை அவகாசம் வழங்கி  அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பல முறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இறுதியாக இலவசமாக ஆன்லைனில் புதுப்பிக்க செப்டம்பர் 14 வரை  அவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ளது. குடிமக்கள் uidai.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று தாங்களாகவே தங்கள் ஆதார் அட்டைகளைப் புதுப்பிக்கலாம்.

இந்திய குடிமக்களின் முக்கியமான ஆவணங்களில் ஆதார் கார்டும் ஒன்று. போஸ்ட் ஆபீஸ், பத்திரப்பதிவு, பேங்க், மருத்துவமனை என பல்வேறு இடங்களில் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. மேலும் கேஒய்சி சரிபார்ப்பிற்கு தேவைப்படும் முதன்மை ஆவணங்களில் ஆதார் கார்டு தான் முன்னிலையில் இருக்கிறது. அரசின் பல்வேறு நலத்திட்ட சேவைகளுக்கு ஆதார் அட்டை அவசியம்.  எனவே ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அப்டேட் செய்ய வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஆதார் காட்டில்  ஒருவருடைய புகைப்படம், பெயர், முகவரி, மொபைல் நம்பர் போன்ற விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நீங்கள் ஆன்லைனில் இந்த விவரங்களை மாற்றிக் கொள்ளலாம்.

ஆதார் தொடர்பான மோசடிகளை தடுக்க, ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஒழுங்குமுறை விதிகளை கடந்த 2016-ம் ஆண்டு ஆதார் ஆணையம் கொண்டு வந்தது. இதன்படி ஆதார் அட்டை வைத்திருக்கும் நபர்கள், ஆதார் பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை சமீபத்திய தகவல்களுடன் புதுப்பிக்க வேண்டும். அந்த அடிப்படையில், ஆதார் அட்டைகளை புதுப்பிக்க ஆதார் ஆணையம் மக்களை அறிவுறுத்தி வருகிறது.

ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம் போன்ற விவரங்களை புதுப்பித்துக்கொள்ள வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வங்கிக்கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணங்களுடன் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்திலும் புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்கள் ஆதார் தகவல்களை புதுப்பித்து வருகின்றனர்.

இதுவரை நாடு முழுவதும் 100 கோடியே 14 லட்சத்து 12 ஆயிரத்து 413 பேர் மட்டுமே ஆதார் அட்டையை புதுப்பித்துள்ளனர் என்றும், 40 கோடியே 7 லட்சத்து 56 ஆயிரத்து 436 பேர் ஆதார் எண்ணை புதுப்பிக்கவில்லை என்றும் ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.  அவர்கள் உடனே தங்களது தகவல்களை புதுப்பித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது. இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 14-ந் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில்  கட்டணமின்றி ஆதாரை புதுப்பிக்க ஆணையம் அவகாசம் வழங்கி உள்ளது.

இதுகுறித்து ஆதார் சேவை மைய நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘ஆதார் சேவை மையத்துக்கு நேரில் சென்று ஆதாரை புதுப்பிக்கும்போது கருவிழி, விரல்ரேகை போன்றவற்றை யும் சேர்த்து புதுப்பிக்கப்படும். தற்போது வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகள் விரல்ரேகை மற்றும் கருவிழி மூலமே ஆதார் உறுதி செய்யப்படுகிறது. திருப்பதி வெங்கடாசலபதி கோவில் தரிசன டிக்கெட்டுகள் கருவிழி மூலம் ஆதாரை உறுதி செய்து தான் வழங்கப்படுகிறது. விரல் ரேகை, கருவிழியை புதுப்பித்து கொள்வதன் மூலம் தேவையான இடங்களில் ஆதார் அட்டையை உறுதி செய்வதற்கான தடைகள் எதுவும் இருக்காது. ஆதாரை புதுப்பிக்காதபட்சத்தில் கைரேகை, கருவிழி போன்றவை ‘மேட்ச்’ ஆவதற்கு சிரமப்படும்’ என்றார்.