சென்னை: சென்னை புறநகர் பகுதியில் அமையள்ள பரந்தூர் பசுமை  விமான நிலையத்திற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து விமான நிலையத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ள முடியாமல் உள்ளதால், சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில்  பரந்தூரில் புதிய பசுமை சர்வதேச விமான நிலைய அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.  இந்த புதிய விமான நிலையம், ஆண்டுக்கு ஒரு கோடி பயணிகளை கையாளக் கூடிய வகையில், சுமார் 32 ஆயிரத்து 704 கோடி ரூபாய் செலவில், நான்கு கட்டங்களாக இந்த விமான நிலையம் உருவாக்கப்படும் என திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக பரந்தூர், ஏகானபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. அதற்காக  கிராமங்கள் காலி செய்யப்பட்டு வருகிறது.  இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டு நிலம் எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.  இதற்காக  காஞ்சிபுரம் வட்டம் நெல்வாய் கிராமத்தில் 69.05 ஹெக்டேர் அளவிலான நிலத்தினையும், ஸ்ரீபெரும்புதூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் 67.13 ஹெக்டேர் நிலத்தினை கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே பரந்தூர் விமான நிலையத்தின் தள அனுமதி வேண்டி  டிட்கோ நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டு மத்திய அரசிடம்  விண்ணப்பித்தது. மேலும், தள அனுமதி தவிர, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் திட்ட அனுமதி மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி ஆகியவற்றிற்கும் விண்ணப்பித்து இருந்தது.

இதையடுத்து பரந்தூர் விமான நிலையத்திற்கான தள அனுமதிக்கான தடையில்லா சான்றிதழை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஆண்டு (2023) வழங்கியது. அதைத்தொடர்ந்து ,ட பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அனுமதி கோரி மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு டிட்கோ விண்ணப்பித்தது.

இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து துறை, ராணுவம் மற்றும் விமானப்படை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பரந்தூரில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். அதையடுத்து,  பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடத்திற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தள அனுமதி வழங்கி உள்ளது.

இதனையடுத்து பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.