டெல்லி: IN-SPACe  திட்டத்தின் கீழ் விண்வெளித் துறைக்கான ரூ.1,000 கோடி துணிகர மூலதன நிதியை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

 வென்ச்சர் கேபிடல் ஃபண்ட் முன்முயற்சியாக இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில்,    புதுமை மற்றும் வளர்ச்சிக்கான ரூ.  1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

அதாவது  விண்வெளித்துறையில் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவ ரூ.1000 கோடி மூலதன நிதியம் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்து உள்ளார்,.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மந்திரிசபை கூட்டம் முடிந்த பிறகு, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இதுகுறித்து நிருபர்களை சந்தித்து மந்திரி சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கினார்.

அதன்படி,  விண்வெளித்துறையில் புத்தொழில் (ஸ்டார்ட்அப்) நிறுவனங்களுக்கு உதவ ரூ.1,000 கோடி தொகுப்பு நிதி கொண்ட மூலதன நிதியம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.  ‘இன் ஸ்பேஸ்’ அமைப்பின் கண்காணிப்பில் நிதியம் செயல்படும் என்றவர்,  இதன்மூலம் விண்வெளி பொருளாதாரம் மேம்படும் என்றார்.

விண்வெளித்துறை தற்போது  தனியாருக்கு திறந்து விடப்பட்டுள்ளது.  இந்த துறையில்  ஈடுபட்டுள்ள சுமார் 40 புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க இந்த நிதி பயன்படுத்தப்படும். செயல்படும்.

நிதியின் பயன்பாட்டு காலம் 5 ஆண்டுகள் ஆகும். முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் நிதி தேவைகளை பொறுத்து, ஆண்டுக்கு சராசரியாக ரூ.150 கோடி முதல் ரூ.250 கோடி வரை பயன்படுத்தப்படும்.

நிதியத்தில் முதலீடு செய்யவும் தனியார் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

செயற்கைக்கோள் தொழில்நுட்பம், செயற்கைக்கோள்களை செலுத்தும் ராக்கெட்டுகள், விண்வெளி செயலிகள் ஆகியவற்றில் புதிய கண்டுபிடிப்பு ஊக்குவிக்கப்படும். அதன்மூலம், விண்வெளித்துறையில் இந்தியாவின் நிலை வலுவடையும், விண்வெளி சீர்திருத்தங்களில் முன்னேற்றம் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்,  ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களில் ரூ.6 ஆயிரத்து 798 கோடி செலவிலான ரெயில் திட்டங்களுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு ஒப்புதல் அளித்தது.

ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி இயங்கி வருகிறது. அமராவதி வழியாக எர்ருபாலம் முதல் நம்பூரு வரை புதிய ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா, குண்டூர் ஆகிய மாவட்டங்கள், தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டம் வழியாக 57 கி.மீ. தூரத்துக்கு இந்த ரெயில் பாதை அமைகிறது. இதன்மூலம், அமராவதிக்கு நேரடி ரெயில் போக்குவரத்து இணைப்பு கிடைக்கும்.

இந்த பாதை, சரக்கு போக்குவரத்துக்கும், மக்கள் போக்குவரத்துக்கும் பெரிதும் பயன்படும். இப்பாதையில் 9 புதிய ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. 168 கிராமங்களுக்கும், அங்கு வாழும் 12 லட்சம் மக்களுக்கும் ரெயில் வசதி கிடைக்கும்.

பீகார் மாநிலத்தில் நர்கதியாகஞ்ச்–ரக்சால்–சீதாமரி–தர்பங்கா, சீதாமரி–முசாபர்பூர் ரெயில் பாதை, இரட்டை ரெயில்பாதையாக மாற்றப்படுகிறது. இதன் தூரம் 256 கி.மீ. ஆகும். இதன்மூலம், நேபாளம், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் எல்லைப்புற பகுதிகளுக்கு ரெயில் இணைப்பு வசதி கிடைக்கும்.

இந்த பாதை, வேளாண் விளைபொருட்கள், உரம், நிலக்கரி, இரும்புத்தாது, உருக்கு, சிமெண்ட் ஆகியவை கொண்டு செல்லப்படும் பாதை ஆகும். இரட்டை ரெயில்பாதை ஆக்கப்படுவதால், சரக்கு போக்குவரத்து வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட 2 ரெயில் திட்டங்கள், ஆந்திரா, தெலுங்கானா, பீகார் ஆகிய 3 மாநிலங்களில் 8 மாவட்டங்கள் வழியாக அமைகின்றன. இதன்மூலம் இந்திய ரெயில்வேயின் நெட்வொர்க் தூரம் 313 கி.மீ. அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.