சென்னை:  முதலமைச்சரின் தனிச் செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தலைமைச்செயலாளர் முருகானந்தம் வெளியிட்டு உள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழக அரசயில் அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. துணைமுதல்வராக உதயநிதி பொறுப்பேற்பார் என கூறப்படும் நிலையில்,  தலைமைச் செயலாளர் உள்பட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் கூண்டோடு மாற்றப்பட்டு வருகின்றனர்.

தமிழக தலைமைச்செயலாளராக இருந்த சிவ்தாஸ்மீதான வேறு துறைக்கு மாற்றப்பட்டு, முருகானந்தம் ஐஏஎஸ் தலைமைச்செயலராக மாற்றப்பட்டதுடன், அதைத்தொடர்ந்து, முதலமைச்சரின் இணை செயலாளராக லட்சுமிபதி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று  முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2வது தனிச்செயலாளராக சண்முகம் ஐஏஎஸ், 3வது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதலமைச்சரின் முதல் தனிச்செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற நிலையில், இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது.