சென்னை:   மதுரை மக்களின் வேண்டுகோளை ஏற்று டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை  மதுரை மக்களை ம சந்திக்க விருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு கடந்த 23ஆம் தேதி அறிவித்தது. இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்களை மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி சந்திக்கவுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டங்ஸ்டன் ஏலம் ரத்து தொடர்பாக இந்த மாதம் இறுதியில் சென்னை வரும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு பாராட்டு விழா மதுரையில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகின. ஆனால், திடீரென  மதுரை அமைச்சர் மூர்த்தி தலைமையில்,  முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு, அதன்படி அவர் அரிட்டாபட்டி, வள்ளாலப்பட்டி கிராம மக்களை சந்தித்து நன்றி தெரிவித்திருந்தார். இது விமர்சிக்கப்பட்டது.

அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறும்போது, மத்தியஅமைச்சருக்கு கிடைக்க வேண்டிய பாராட்டினை முதல்வர் ஸ்டாலின் முந்திக்கொண்டு சென்று பெற்றுள்ளார், இதில் ஸ்டாலின் அரசியல் செய்திருக்கிறார், இந்த மாலை அண்ணாமலை கழுத்தில் விழுந்திருக்க வேண்டும் என விமர்சித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, டங்ஸ்டன் சுரங்கத்தை தடுத்து நிறுத்தியதாக விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், மத்தியஅமைச்சர் கிஷன் ரெட்டி மதுரை பகுதி மக்களை சந்திக்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி, வல்லாளப்பட்டி, நாயக்கன்பட்டி பகுதி அம்பலகாரர்கள், கிராம மக்கள் மற்றும் விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடுவதாக, மத்திய அரசு அறிவித்ததையடுத்து, பிரதமர் மோடிக்கும் மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டிகும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

கிராம மக்கள் பிரதிநிதிகள் குழு, அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தபோது, அவரை தங்கள் கிராமத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். தன்னரசு மத்தம் மேலநாடு பொதுமக்கள் மற்றும் அம்பலகாரர்களின் அன்பான அழைப்பை ஏற்றுக்கொண்ட நமது மத்திய அமைச்சர் வரும் ஜனவரி 30, 2025 அன்று மாலை 4 மணிக்கு, மதுரை அ.வல்லாளப்பட்டிக்குச் சென்று பொதுமக்களை நேரில் சந்திக்கவிருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.