வாஷிங்டன்
அமெரிக்க அதிபர் டிரம்ப் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்துக்கு 25% வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்கஅதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், பதவியேற்ற நாள் முதலே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அவரது வரி விதிப்பு நடவடிக்கைகள் உலக அரங்கில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
டிரம்ப் மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனா பொருள்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்து மெக்சிகோவும் கனடாவும் புலம்பெயர்வு மற்றும் பெண்டனில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த நடவடிக்கைத் தொடரும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த புதிய வரி விதிப்பு நடவடிக்கைகளால் பல்வேறு நாடுகளின் கரன்சி மதிப்பு குறையத் தொடங்கி உலகளாவிய பங்குச்சந்தைகளில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. மேலும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
இன்று கனடா மற்றும் மெக்சிகோ உட்பட அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் மீது அமெரிக்கா 25 சதவீதம் வரை கூடுதல் வரிகளை விதிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனவும் வார இறுதியில் பிற இறக்குமதி வரிகள் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார்.
மற்ற நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்தால், அந்த நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவும் இறக்குமதி வரிகளை விதிப்பது (பரஸ்பர வரிகள்) தொடர்பாக அறிவிப்பேன் என்று டிரம்ப் மீண்டும் கூறி உள்ளார். அநேகமாக பரஸ்பர வரிகளை செவ்வாய் அல்லது புதன்கிழமை அறிவிக்கலாம் எனவும் கூறி உள்ளார்.
இந்த அறிவிப்பு, அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் முக்கிய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எஃகு ஏற்றுமதி செய்யும் தென் கொரியா அரசு இன்று கூட்ட உள்ள அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும்படி வெளியுறவு கொள்கை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மற்றும் வர்த்தக நிறுவன அதிகாரிகளுக்கு நாட்டின் தற்காலிக அதிபர் சோய் சாங்-மோக் அழைப்பு விடுத்துள்ளார்.