இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25 சதவீதம் கூடுதல் வரிவிதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மக்கானா எனப்படும் தாமரை விதை ஏற்றுமதி இதனால் வெகுவாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் பாப்கார்னுக்கு பதிலாக சத்துமிக்க மக்கானாவுக்கு அங்குள்ளவர்கள் பழக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இதற்கான இறக்குமதி வரியை 3.5 சதவீதத்தில் இருந்து 29.5 சதவீதமாக உயர்த்தியிருக்கிறார் டிரம்ப்.

இதையடுத்து ஏற்றுமதி பாதிக்கும் என்பதால் இந்திய மக்கானா விவசாயிகள் பெரிதும் கலக்கமடைந்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக 85 சதவீத மக்கானா பீகார் மாநிலத்தில் வளர்க்கப்படும் நிலையில் அங்குள்ள விவசாயிகள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

தவிர, பீகார் மாநில தேர்தல் நேரத்தில் மக்கானா விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்த மக்கானா வாரியம் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்ததோடு தேர்தல் பிரச்சாரத்திலும் மக்கானா குறித்து பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாஜக-வின் கனவை கலைக்கும் வகையில் டிரம்ப் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்குமா என்று விவசாயிகள் மத்தியில் தற்போது கேள்வி எழுந்துள்ளது.