அமெரிக்க தேசிய வானிலை ஆய்வாளர்கள் நூற்றுக்கணக்கானோரை பணிநீக்கம் செய்து DOGE உத்தரவிட்டுள்ளது.
சிக்கன நடவடிக்கை காரணமாக அமெரிக்க அரசு பணியாளர்கள் சிலரை பணிநீக்கம் செய்ய DOGE துறையின் தலைவர் எலன் மஸ்க் அதிபர் டிரம்புக்கு பரிந்துரைத்துள்ளார்.
இதையடுத்து பல்வேறு அரசுத் துறை நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெறாத ப்ரொபெஷனரி பணியாளர்கள் ஆயிரக்கணக்கானோரை பணிநீக்கம் செய்ய அதிபர் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தற்போது தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக (National Oceanic and Atmospheric Administration – NOAA) ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால், நூற்றுக்கணக்கான வானிலை ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர்.
இரண்டு சுற்றுகளாக நடைபெற உள்ள இந்த நடவடிக்கையில் முதல் சுற்றில் தகுதிகாண் ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட உள்ளனர். மொத்தமாக NOAA இன் பணியாளர்களில் சுமார் 10% ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
“இன்று, தேசிய வானிலை சேவையில் (NWS) வானிலை முன்னறிவிப்பாளர்கள் உட்பட தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தில் (NOAA) நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு எந்த நல்ல காரணமும் இல்லாமல் பணிநீக்க அறிவிப்புகள் வழங்கப்பட்டன. இது மனசாட்சிக்கு புறம்பானது” என்று பணியாளர் சங்க பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார்.