சென்னை: பயணிகளின் வசதிக்காக, சென்னையில் ஒரே டிக்கெட்டில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயிலில் பயணம் செய்யும்  நடைமுறை இந்த ஆண்டு இறுதியில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான டெண்டர் கோரப்பட்டு உள்ளது.

 ஒரே டிக்கெட்டில் மூன்று வகை போக்குவரத்தில் பயணிக்கும் வகையில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் இந்த புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.  முழுவதும் ஒரே டிக்கெட்டில், பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என 3 வகையான போக்குவரத்துகளில் பயணங்களை மேற்கொள்ளும் திட்டம் அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதம் நடைமுறைக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக, வரும் டிசம்பரில் மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் மட்டும் இத்திட்டம் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான  பொது செயலியை உருவாக்கும் பணியை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (CUMTA).  Moving Tech Innovations Private Limited என்ற நிறுவனத்திற்கு வழங்கி உள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நாள்தோறும் பணிக்கு செல்லும் லட்சக்கணக்கானோர் மாநகரப் பேருந்துகள், புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சிலரின் வீடுகளிலிருந்து அலுவலகத்திற்கு செல்வதற்குப் பேருந்து மற்றும் ரயில், மெட்ரோ ஆகிய மூன்று போக்கு வரத்தையும் பயன்படுத்தினால்தான் விரைவாக அலுவலகம் சென்றடையும் நிலை உள்ளது. இதனால்,   மூன்று வகை போக்குவரத்தையும் பயன்படுத்தும் ஒருவர், வெவ்வேறு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பேருந்து, ரயில், மெட்ரோ உள்ளிட்டவைக்கு தனித்தனியே பயணச்சீட்டு வாங்கும் சூழல் உள்ளது. இதனால் கால தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், ஒரே பயணச்சீட்டில்  பேருந்து மேட்ரோ, மின்சார ரயிலில் பயணம் செய்வதற்கான நடைமுறையை கொண்டு வரும்படி, பல ஆண்டுகளாக  பயணிகளின் தரப்பில் கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.

இதையடுத்து, பயணிகளின் கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசு பல கட்ட ஆலோசனை நடத்தியதுடன், அதற்காக  சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தை உருவாகியது.  இந்த குழுமம்  மாநகரப் போக்குவரத்தின் கீழ் இயங்கும் பேருந்து, சென்னை மெட்ரோ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மெட்ரோ ரயில்கள், தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் புறநகர் ரயில்களை இணைத்து செயல்படும் வகையிலான திட்டங்களை உருவாக்கிய தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெற்றது.

இதைத்தொடர்ந்து,  பேருந்து, ரயில், மெட்ரோ ரயிலில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் செயலியை உருவாக்க மூவிங் டெக் இன்னொவேஷன்ஸ் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

இந்த செயலி நடைமுறைக்கு வந்ததும்,  முதல்கட்டமாக  வரும்,  டிசம்பரில் மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் வகையில் ஒரே டிக்கெட் முறை அமலுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு, மார்ச்சில் புறநகர் ரயில்களிலும் பயணம் செய்யும் வகையில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.