கடலூர்: கடலூர் செம்மங்குப்பம் லெவல் கிராசிங்கில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்தில் 3 பள்ளி குழந்தைகள் பலியானதுடன் பலர் பலத்த காயமடைந்து உள்ளனர். இந்த விபத்துக்கு காரணம், ரயில்வே கேட்டை உரிய நேரத்தில் மூடாத கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார்.
ரயில் வருவது தெரிந்தும் வேன் டிரைவர் கூறியதை கேட்டு ரயில்வே கேட்டை திறந்ததே விபத்திற்கு காரணம் என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்து உள்ளது. சம்பவ இடத்துக்கு ரயில்வே அதிகாரிகள், தமிழ்நாடு அமைச்சர்கள் விரைந்துள்ளனர்.

கடலூர், சிதம்பரம் அருகே உள்ள செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று மாணவர்களை ஏற்றி கொண்டு இன்று காலை 7.45 மணி அளவில் கடலூர் – ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றது. அப்போது பள்ளி வேன் மீது விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து ரயில் டிரைவர் உடனே பிரேக் போட்டு ரயிலை நிறுத்திய நிலையில், ரயிலின் இஞ்சினில் சிக்கிய வேன் சில மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இதில் வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.
பள்ளி குழந்தைகளில் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மாணவர் நிவாஸ் (12), மாணவி சாருமதி (16) என 2 பேர் உள்பட 3 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் காயம் அடைந்து உள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த 4 மாணவர்கள் செழியன், விஷ்வேஸ், பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் ஆகியோருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து உடனே சம்பவத்தக்கு வந்த கடலூர் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார், உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். விசாரணையில், இந்த விபத்தின்போது, ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது. ரயில்வே கேட்டை மூடுவதற்காக இருந்த ரயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடவில்லை என கூறியரயில்வே கேட் கீப்பர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்த நிலையில், ரயில்வே கேட் கீப்பரிடம் விசாரணை நடத்தியதில், கேட்டை மூட முயன்றபோது வேன் ஓட்டுநர் கேட்டை திறக்க வலியுறுத்தியதாக ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. பள்ளி வேன் சென்ற பிறகு ரயில்வே கேட்டை மூடுமாறு வேன் ஓட்டுநர் கூறியதாக முதல்கட்ட தகவல் வெளியாகி யுள்ளது.
இதையடுத்து கடலூர் – மயிலாடுதுறை மார்க்கத்தில் செல்லும் முக்கிய ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. தண்டவாளத்தை ஆய்வுசெய்த பிறகே ரயில் சேவை மீண்டும் தொடங்க உள்ளது என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த விபத்து நடந்த இடத்துக்கு திருச்சி ரயில்வே எஸ்.பி. ராஜன் விரைந்துள்ளார். திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன், திருச்சி, சென்னை ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார். மேலும், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ் விரைகின்றனர்.
இந்த விபத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதியபோது ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை என்பவர் மீது மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முற்கட்ட விசாரணையில், விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களின் புத்தகப் பைகள் தண்டவாளத்தில் சிதறிக் கிடந்தன. அதை அங்கிருந்தோர் சேகரித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கேட் கீப்பர் கேட்டை மூட முயற்சித்தபோது, தண்டவாளத்தைக் கடந்து சென்று விடுகிறேன் என ஓட்டுநர் வற்புறுத்திச் சென்றதே விபத்துக்கு காரணம் என ரயில்வே நிர்வாகம் தகவல்.