சென்னை

நாளை முதல் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கட் முன்பதிவு தொடங்குகிறது.

சொந்த ஊரை விட்டு வேறு ஊர்களில் தங்கி இருந்து வேலை செய்பவர்கள் மற்றும் கல்வி கற்பவர்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெரும்பாலானோர் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்பார்கள். ஏனெனில் ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்வார்கள்.

அடுத்த ஆண்டு ஜனவரி13ம் தேதி திங்கள் கிழமை போகி பண்டிகையும், ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகையும், 15ம் தேதி (புதன்கிழமை) மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளன. 16ம் தேதி (வியாழக்கிழமை) காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

எனவே பொங்கல் பண்டிக்கை ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை (செப்.12) தொடங்குகிறது., ஜனவரி 10ம் தேதி (வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய விரும்புவோர் நாளையும் (செப்.12-ம் தேதி), ஜன.11ம் தேதி பயணம் செய்ய செப்.13ம் தேதியிலும், ஜன.12ம் தேதி பயணம் செய்ய செப்.14ம் தேதியும், ஜன.13ம் தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்புவோர் செப்.15ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.