டில்லி:

நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற உள்ள நிலையில், தலைநகர் டில்லியில் 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்  குடியரசு தின விழாவை சீர்குலைக்க திட்டம் திட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

தலைநகர் செங்கோட்டையில் நாளை குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற உள்ளது. அப்போது  தாக்குதல் நடத்த திட்டமிட்ட 2 பயங்கரவாதிகளை டில்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

குடியரசு தின பாதுகாப்பு நடவடிக்கையாக கடந்த சில நாட்களாக டில்லி உள்பட நாட்டின்  பல்வேறு இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தலைநகரில் நடைபெற்ற அதிரடி சோதனைகளின்போது, கடந்த 2 நாட்களில் மட்டும் 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கிழக்கு டெல்லியில் லாஜ்பத் நகர் மற்றும் கேஸ் பைப்லைனில் வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர்  ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் லத்திப் கான் (எ) தில்வார். இவர் டில்லியில் கைது செய்யப்பட்டார்.  மற்றொரு பயங்கரவாதி ஹிலால்  என்பவர். இவர் , காஷ்மீர்  பந்திபோரா பகுதியில் கைது செய்யப் பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.