சென்னை:  நாட்டின் 76வது குடியரசு தினத்தையொட்டி, நாளை சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைத்து தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.

நாடு முழுவதும் நாளை ( ஜனவரி 26 – ஞாயிற்றுக்கிழமை) 76-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.  தமிழ்நாட்டிலும் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்வர். மேலும் காவல்துறை உள்பட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்யப்படும்.

சென்னையில்,  தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே பல ஆண்டுகளாக  குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், தற்போது  அந்தப் பகுதியில்மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த இரு ஆண்டுகளாக, அதற்கு பதிலாக மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே விழா நடைபெற்று வருகிறது.

நாளை குடியரசு தின விழா நடைபெறுவதையொட்டி, உழைப்பாளர் சிலை அருகில்  பிரமாண்டமான அளவில் பந்தல்கள் போடப்பட்டுள்ளன. மேலும் தற்காலிக கொடிக்கப்பமும் அமைக்கப்பட்டு உள்ளது.

நாளை காலை நடைபெறும் நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்என்.ரவி தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்கிறார். இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின்,  அங்கு சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, நீதிபதிகள், வெளிநாட்டு தூதுவர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள்  கலந்துகொள்கிறார்கள்.

குடியரசு தின  விழா நடைபெறும் பகுதிக்கு காலை 7.52 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவார். அப்போது அவரது காரின் முன்னும், பின்னும் மோட்டார் சைக்கிள்களில் போலீசார் புடைசூழ்ந்து வருவார்கள்.  மேடை அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்பார்.

இதைத்தொடர்ந்து,  விழா நடைபெறும் பகுதிக்கு காலை 7.54 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, மனைவி லட்சுமி ரவியுடன் வருகை தருவார். அவர், விமானப்படையினர் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்படுவார். அவர் காலை , 7.58 மணிக்கு  மேடைக்கு அருகே வருகை தருவார். அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பார்.

இதைத்தொடர்ந்து, அவருக்கு  தென்னிந்திய பகுதிகளின் ராணுவ மேஜர் ஜெனரல், கடற்படை அதிகாரி, தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி, கடலோர காவல்படை (கிழக்கு) கமாண்டர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) ஆகியோரை கவர்னருக்கு சம்பிரதாயப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைப்பார்.

இந்த நிகழ்வுகள் முடிந்ததும் சரியாக காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி  தேசியக் கொடியைஏற்றி வைப்பார். அப்போது அந்தப் பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவும் நிகழ்ச்சி நடைபெறுவதுடன்,  அந்த நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும்.  அனைவரும் தேசிய கொடிக்கு மரியாதை செய்வர்.

இதைத்தொடர்ந்து, கடற்கரை சாலையில், அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். முதலில், ராணுவப் படைப்பிரிவு, கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படைப் பிரிவினர் அணி வகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்துவார்கள். அதை அவர் ஏற்றுக்கொள்வார். அப்போது, கடற்படை ஊர்தியில் போர்க் கப்பலின் சிறிய வடிவம், வான்படை ஊர்தியில் சிறிய வடிவிலான விமானம், கடலோர காவல்படை ஊர்தியில் சிறிய வடிவிலான படகுகள் ஆகியவை அணி வகுத்து கொண்டு வரப்பட உள்ளது.

இதையடுத்து  சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., ஆர்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படை, கடலோர பாதுகாப்புக் குழு, ஊர்க்காவல் படை (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்பட 30 படைப்பிரிவினர் அணி வகுத்துச் செல்வார்கள்.

அதன் பின்னர் அணி வகுப்பு மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து பதக்கங்களை வழங்குவார். வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு முதலமைச்சர் வழங்குவார். பதக்கம் பெற்றோர் குழுவாக முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள்

பின்னர் விழா மேடையில் கவர்னர், முதலமைச்சர் அமர்ந்திருக்க, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும்.

முதலில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் மங்கள இசை ஊர்தி உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் ஊர்திகள், அரசின் நலத்திட்டங்களை விவரிக்கும் வகையிலான வடிவமைப்புகளுடன் வலம் வரும். அதற்கு முன்னதாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.