சென்னை:  ஆகஸ்டு 15ந்தேதி, நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், பள்ளிகளில்  தேசியகொடி ஏற்றுவது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து  பள்ளிகளிலும்  தேசிய கொடி ஏற்றி, சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் கொண்டாட வேண்டும். பிளாஸ்டிக் வகையிலான தேசிய கொடியை பயன்படுத்தக் கூடாது உள்பட பல அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள  சுற்றறிக்கையில்,  சுதந்திர தினம் நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.  அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை தேசி கொடி ஏற்றி  மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் கொண்டாட வேண்டும்.

பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்கரித்து தேசிய கொடி ஏற்றி விழாவை கொண்டாடலாம்.

ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து விழாவில் பங்கு பெற செய்ய வேண்டும்.

பிளாஸ்டிக் வகையிலான தேசிய கொடியை பயன்படுத்தக் கூடாது.

மேலும், தேசிய கொடியை தலைகீழாகவோ, கிழிந்ததையோ ஏற்றக்கூடாது.

தேசிய கொடியை ஏற்றுவதில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.