சென்னை

தொடர்ந்து சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை குறைந்து வருகிறது.

கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து தக்காளி விளைச்சல் பாதிப்பால், வரத்து குறைந்து அதன் விலை கிடுகிடுவென உயரத்தொடங்கியது. தொடர்ந்து விலை உயர்ந்து, சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு மேல் சென்றது மட்டுமல்லாமல், வெளி சந்தை மற்றும் சில்லறைக் கடைகளில் ரூ.200 வரை சென்றது.

எனவே இல்லத்தரசிகள் தக்காளியை வாங்க முடியாத அளவுக்கு அதன் விலை எகிறியது. தக்காளியின் விலை எப்போது குறையும்? என்று இல்லத்தரசிகள் எதிர்பார்த்தபடியே இருந்தனர். தக்காளியின் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து விலை சரியத் தொடங்கியது. ஒரே வாரத்தில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.70 முதல் ரூ.90 வரை குறைந்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளியின் விலை மேலும் சரிந்துள்ளது. இன்று கோயம்பேடு சந்தையில் முதல் தர தக்காளி ஒரு கிலோ ரூ.10 குறைந்து ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இரண்டாம் தரம், மூன்றாம் தர தக்காளிகளின் விலையும் குறைந்துள்ளது.

தமிழக மாநிலத்தில் அதிக அளவில் விளையத் தொட’ங்கி உள்ள தக்காளி சென்னை கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்கு வரத்தொடங்கியதால் விலை குறைந்துள்ளது. தக்காளி விலை தொடர்ந்து குறைந்து வருவதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.