டில்லி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் தகவல் உரிமை சடத்தின் கீழ் வருவார் என்னும் டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது.

‘உச்சநீதிமன்ற நீதிபதியும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) வருவார்,’ என கடந்த 2010 ஆம் வருடம்  ஜனவரி 10ம் தேதி டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில், ‘நீதித்துறை சுதந்திரம் என்பது ஒரு போதும் நீதிபதியின் தனியுரிமையைப் பாதிக்காது,’ என்று கூறப்பட்டது.  இத்தீர்ப்புக்கு அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பால கிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

டில்லி உயர்நீதிமன்ற எதிர்த்து உச்ச நீதிமன்ற பதிவாளர், அதன் மத்திய பொது தகவல் துறை அதிகாரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ரமணா, சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.

வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் 4ம் தேதி முடிந்து இதன் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த வாரத்துடன் பணி ஓய்வு பெற உள்ளதால் அவர் விசாரிக்கும் வழக்குகளின் தீர்ப்பை வழங்கி வருகிறார்.  அவ்வகையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.