பெங்களூரு

ர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ்பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் 24ஆம் தேதியுடன் இந்த ஆட்சியின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் புதிய ஆட்சி பதவி ஏற்கும் வகையில், 224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி (அதாவது இன்று) ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த மார்ச் 29-ந்தேதி அறிவித்தது.

கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.  இவர்களில் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும் (மேல்கோட்டை தொகுதியில் மறைந்த விவசாய கட்சி தலைவர் புட்டண்ணய்யா மகன் தர்ஷனுக்கு ஆதரவு), ஜனதாதளம் (எஸ்) கட்சி 209 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 209 வேட்பாளர்களும், 918 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் ஒரே ஒரு திருநங்கை போட்டியிடுகிறார்.

நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பகிரங்க பிரசாரம் முடிவடைந்தது. தொகுதிகள் மற்றும் மாநிலத்திற்கு சம்பந்தம் இல்லா வெளியூர் நபர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர். கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இன்ரு வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.

தேர்தலில் வாக்களிக்க 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 பேர் தகுதி உள்ளவர்களாக உள்ளனர்.  இவர்களில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும், பிற வாக்காளர்கள் 3-ம் பாலினத்தவர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் உள்ளனர்.  தவிர இவர்களில் 11 லட்சத்து 71 ஆயிரத்து 558 பேர் இளம் வாக்காளர்கள், 5 லட்சத்து 71 ஆயிரத்து 281 பேர் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ஆவார்கள்.  மேலும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் 12 லட்சத்து 15 ஆயிரத்து 920 பேர் உள்ளனர்.

இந்த வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 58,545 வாக்குச்சாவடிகள் மாநிலம் முழுவதும் 37 ஆயிரத்து 777 இடங்களில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.  இவற்றில் 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆகும். மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக சாய் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த தேர்தலுக்கான பணியில் சுமார் 4 லட்சம் அலுவலர்கள் ஈடுபடுகிறார்கள்.

நேற்று காலையில் அவர்களுக்கு மின்னணு வாக்கு எந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவுக்கு தேவையான தளவாடப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் 75 ஆயிரத்து 603 மின்னணு வாக்கு எந்திரங்களும், 70 ஆயிரத்து 300 கட்டுப்பாட்டு எந்திரங்களும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படுகின்றன. தவிர யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் 76 ஆயிரத்து 202 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வாக்குப்பதிவை எந்தவித அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியாக நடத்த பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே 5 பேருக்கு மேல் ஒன்றாக செல்ல கூடாது, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலம் நடத்த தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.