டெல்லி,

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் வீட்டுக்கு ஆறுதல் சொல்ல சென்ற உ.பி. முதல்வரின் ஆடம்பர நடவடிக்கைகள்  பொதுமக்களின் வெறுப்புக்கு காரணமாகி உள்ளது.

கடந்த மாதம், காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தின் அடாவடி தாக்குதலில் ராணுவ வீரர் பிரேம் சாகர் உயிரிழந்தார்.  அவருடைய உடல் பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் சிதைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

இறந்த  ராணுவ வீரர் வீடுஉ.பி. மாநிலம் தியோரியா பகுதியில் உள்ளது. அவரது குடும்பத்தின ருக்கு  ஆறுதல் கூற மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விரும்பினார். அதைத்தொடர்ந்து அவர் அங்கு சென்றார்.

ஆனால், வருவதற்கு முன்பாக அங்கு நடைபெற்ற  நிகழ்வுகள் அனைத்தும் ராணுவ வீரரின் குடும்பத்தாரை அவமான அடைய செய்யும் அளவில் இருந்ததாக கூறப்படுகிறது. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் யோகி வருவதற்காக ராணுவ வீரரின் வீட்டில் அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்தனர். முழுதும் கட்டி முடிக்கப்படாத அந்த வீட்டில் தற்காலிகமாக ஏசி, யோகிக்கு பிடித்தமான காவி கலரில் புதிய சோபா செட்டுகள்,  விலை உயர்ந்த நாற்காலிகள் போன்றவை போடப்பட்டு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டி ருந்தது.  மின்சாரம் இருப்பதை உறுதி செய்ய ஜெனரேட்டர் வசதியும் உடனடியாக செய்யப்பட்டு உள்ளது.

மேலும், அந்த பகுதிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் சிமெண்ட் சாலைகளாக மாற்றப்பட்டு பளிச்சென இருந்தது.

மறைந்த ராணுவ வீரர் குடும்பத்தினரிடம் சுமார் 25 நிமிடம் யோகி பேசி ஆறுதல் கூறினார். அப்போது,  யோகி ஆதித்யநாத் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தாருக்கு ரூ. 6 லட்சம் நிதி உதவி வழங்கியும், வீட்டில்  ஒருவருக்கு வேலை தருவதாகவும் வாக்குறுதி அளித்து உள்ளார்.

அவர் சென்றதும்  அவரது வீட்டில் மாட்டப்பட்டிருந்த ஏசி, சோபா முதல் அனைத்தும் திருப்பி எடுத்துச்செல்லப்பட்டன.

இது மறைந்த ராணுவ வீரர் குடும்பத்தை அவமானப்படுத்துவதாக அமைந்ததாக ராணுவ வீரரின் குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் கூறி உள்ளனர்.

இதுகுறித்து மறைந்த ராணுவவீரரின் தந்தை கூறும்போது, முதல்வர் ஆறுதல் கூற வருவதாக கூறி சிறப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் எங்கள் வீட்டிற்கு வந்து செய்தனர்.

தற்போது அனைத்தும் திரும்ப எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எங்களை அவமானப்படுத்தி உள்ளனர் என உணர்கிறோம் என கூறிஉள்ளார்.