சென்னை

ன்று முதல் தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தொடங்குகிறது.

தமிழகத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் உள்ள 430 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 காலி இடங்கள் இருக்கின்றன. இவை கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளதால் இதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு குறித்த அட்டவணை வெளியிடப்பட்டது.

இன்று கலந்தாய்வு தொடங்க உள்ளது. இதில் முதலில் மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது.

இன்று அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறப்பு பிரிவில் வரும் மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு நடக்க இருக்கிறது.

விளையாட்டு பிரிவில் 38 இடங்களும், முன்னாள் படைவீரர்கள் பிரிவில் 11 இடங்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 579 இடங்களும் இவர்களுக்கு இருக்கின்றன. இவற்றுக்கு 261 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

இன்று காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்யவும், அன்று இரவே தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்பட்டு, நாளை பிற்பகல் 3 மணிக்குள் அதனை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு உறுதி செய்பவர்களுக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை அன்றைய தினம் மாலை 6 மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது.

இதைத் தொடர்ந்து பொதுப் பிரிவில் வரும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நாளை மறுதினம் முதல் 27-ந்தேதி வரை நடைபெற உள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றதும், பொது கலந்தாய்வும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் நடக்க உள்ளது.

இந்த கலந்தாய்வுகள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட இருக்கிறது.

தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கை அலுவலகம் அந்தந்த பிரிவில் வரும் மாணவ-மாணவிகள் அவர்களுக்கான நாட்களில் கலந்தாய்வில் பங்கு பெற்று, இடங்களை தேர்வு செய்ய அறிவுறுத்தி உள்ளது.