சென்னை’
ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தமிழக முதல்வர் ரூ. 3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்0.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”திருப்பூர் மாவட்டம், கந்தம்பாளையத்தில் வசித்துவரும் ஆந்திர மாநிலம், சித்தூர். மங்கலசமுத்திரத்தைச் சேர்ந்த ரேவதி (வயது 36) க/பெ.ஜெமினி ஜோசப் என்ற நான்கு மாத கர்ப்பிணி பெண் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக கடந்த 6.02.2025 அன்று பிற்பகல் கோயம்புத்தூர் திருப்பதி விரைவு ரெயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணித்தபோது, ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் அப்பெட்டியில் ஏறிய கே.வி.குப்பம். பூஞ்சோலை கிராமம். சின்ன நாகல் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவன் அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்று அப்பெண்ணைத் தாக்கி வேலூர் மாவட்டம். கே.வி.குப்பம். சீதாராமன் பேட்டை அருகில் ஓடும் ரெயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டதில் அந்தப் பெண் பலத்த காயம் அடைந்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தப் பெண்ணிற்கு நேற்று (8.2.2025) கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும். இச்சம்பவத்தில் காயமடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ரேவதி அவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரேவதி அவர்களின் முழு மருத்துவ செலவையும் தமிழக அரசே ஏற்கும்.
இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஹேமராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரேவதி அவர்களின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.”
என்று தெரிவித்துள்ளார்.