அருள்மிகு ஜெகந்நாதப்பெருமாள் திருக்கோயில், திருமழிசை, திருவள்ளூர் மாவட்டம்.

அத்திரி, பிருகு, வசிஷ்டர், பார்க்கவர் ஆகிய பிரம்மரிஷிகள் பிரம்மனிடம் சென்று பூலோகத்தில் தாங்கள் தவம் செய்ய விரும்புவதாகவும், அதற்குத் தகுந்த இடத்தை காட்டுமாறும் வேண்டினர். பிரம்மன், தேவசிற்பியை அழைத்து ஒரு தராசைக் கொடுத்து அதன் ஒரு பக்கத்தில் திருமழிசை தலத்தையும், மறுபக்கத்தில் பூமியில் உள்ள பிற புண்ணியதலங்களையும் வைத்தார்.

அப்போது, திருமழிசைத்தலம் இருந்த தட்டு கனமாக கீழே இழுத்தபடியும், பிற தலங்கள் இருந்த தட்டு மேலெழும்பியும் இருந்தது. இக்காட்சியைக்கண்டு வியந்த பிரம்மரிஷிகள் திருமழிசைத்தலத்தின் மேன்மையை அறிந்து, பிரம்மனிடம் ஆசி பெற்று இங்கு வந்து தவமிருந்தனர். அவர்களுக்கு பெருமாள், அமர்ந்த கோலத்தில் ஜெகந்நாதராக காட்சி தந்தருளினார்.

ஒருமுறை பரமசிவனும், பார்வதியும் ஆகாயத்தில் ரிடப வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, யோகத்தில் இருந்த திருமழிசை ஆழ்வாரைக்கண்ட பார்வதி, சிவனிடம் கூறி ஆழ்வாருடன் வார்த்தை விளையாடக் கூறினார். அதன்படி சிவன் ஆழ்வாரிடம் பேச, முடிவில் அவர்களுக்கிடையேயான பேச்சு வாதத்தில் முடிந்தது.

ஆழ்வாரின் சொல்வன்மையை கண்டு வியந்த சிவன் அவருக்கு, “பக்திசாரர்” என சிறப்புப் பெயர் சூட்டினார். சைவம் மற்றும் வைணவம் என இரு மதத்திலும் ஈடுபட்டு பாடல்கள் இயற்றிய இவர் நான்காம் ஆழ்வார் ஆவார். கால் கட்டைவிரல் நகத்தில் ஞானக்கண்ணைப்பெற்ற இவர் அவதரித்த இத்தலத்தில் இவருக்கு தனிச்சன்னதி உள்ளது.

கருவறை சுற்றுச்சுவரில் உள்ள விநாயகர், தனது வயிற்றில் இராகுவும், கேதுவும் பின்னியுள்ளபடி காட்சி தருகிறார். இவரை வணங்கிட இராகு, கேது தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. விநாயகர் சதுர்த்தியன்று இவருக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன.

பிருகு, மார்க்கண்டேய மகரிஷிகளுக்காக சுவாமி இவ்விடத்தில் காட்சி தந்ததால், அவர்களிருவரும் கருவறையில், தவக்கோலத்தில் சுவாமியை வணங்கியபடி உள்ளனர். பூமியிலுள்ள புண்ணிய தலங்கள் அனைத்தின் மகிமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள தலமென்பதால், இத்தலம் “மகீசாரம்” என அழைக்கப்படுகிறது. இங்கு பிறந்தவர்களுக்கும், இத்தலத்து பெருமாளை வணங்கியவர்களுக்கும் மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.

இங்குள்ள விமானம் ஜெகந்நாத விமானம். இங்குள்ள இராஜகோபுரம் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. பிரகாரத்தில் ஜெகந்நாதர், இலட்சுமி நரசிம்மர், ஆண்டாள், மணவாள மாமுனி சன்னதிகள் உள்ளன. திருப்புல்லாணியில் சயனகோலம், பூரியில் நின்ற கோலத்தில் காட்சிதந்த பெருமாள், இங்கு வீற்றிருந்த கோலத்தில் காட்சி தந்ததால் இத்தலம் “மத்திய ஜெகந்நாதம், பூர்ணஜெகந்நாதம்” என்ற சிறப்பு பெயரைப் பெற்றுள்ளது. திருமழிசை ஆழ்வார் அவதரித்ததால் இவ்வூர் அவரது பெயரைக்கொண்டே அழைக்கப்படுகிறது.

திருவிழா:

ஆனியில் பிரம்மோற்சவம், ஐப்பசியில் மணவாள மாமுனி உற்சவம், தை மகத்தில் ஆழ்வார் விழா, மாசியில் தெப்பத்திருவிழா.

கோரிக்கைகள்:

இங்குள்ள பிருகு தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினால் பாவங்கள் விலகும், அம்பாளை வணங்கிட குழந்தை பாக்கியம், ஐஸ்வர்யம் பெருகும், சங்கு, சக்கரத்துடன் காட்சி தரும் வைஷ்ணவிக்கு மாலை சாத்தி வழிபட தடைபட்ட திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியவுடன் பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் செய்து, துளசியால் அர்ச்சனை செய்கிறார்கள்