திருப்பூர் மாவட்டம் செங்கபள்ளி அருகே பிடிபட்ட பண கன்டெய்னர் பற்றிய மர்மம் நீடிக்கும் நிலையில், அது குறித்து தகவல்களை கேட்டு, ஆர்டிஐ (தகவல் அறியும் உரிமச்சட்டம்) மூலம் எஸ்பி.ஐ வங்கியை அணுகியிருக்கிறார் திருப்பூர் மாவட்டம் பாப்பாங்குளத்தைச் சேர்ந்த சு. சிவபிரகாஷ் என்பவர்.
இவர், எஸ்.பி.ஐ. வங்கியின் தலைமை பொது நல அலுவலருக்கு ஆர்.டி.ஐ. மூலம் கேட்டிருக்கும் தகவல்கள்.
பிடிபட்டது எஸ்.பி.ஐ. பணம்தானா?
வங்கிப் பணம் என்றால் எதற்காக எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்பட்டது?
அந்த பணத்தை பரிவர்த்தனை செய்வதற்கு மத்திய ரிசர்வ் வங்கி வழங்கிய அனுமதி ஆவணங்களின் நகல்களை அனுப்பவும்.
அந்த பணம் தேர்தல் நேரத்தில் அவசரமாக பரிவர்த்தனை செய்ய வேண்டிய அவசியம் என்னவென்று கூறவும்..
தேர்தல் நேரத்தில் பறக்கும்படை செயல்படுவது வழக்கம்தான். ஆகவே இந்த அளவு பெரிய தொகையை பரிவர்த்தைனை செய்யப்போவதை முன்கூட்டியே தேர்தல் கமிசனுக்கு தெரிவிக்காதது ஏன்.
அந்த பணம் எந்த வங்கியிலிருந்து எடுக்கப்பட்டு லோடு செய்யப்பட்டது?
அப்படி வாகனத்தில் நிரப்பும்போது வங்கி சி.சி. கேமராவில் பதிவாகியிருக்குமே.. அந்த காப்பியை வழங்கவும்!
- இவ்வாறு கேட்டிருக்கும் சு. சிவபிரகாஷ், இந்த மனுவின் நகல்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர், திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பி இருக்கிறார்.
பிரம்மா மனு (முதல் பக்கம்)
இதே போல மர்ம கன்டெய்னர்கள் குறித்த தகவல்களை கேட்டு திருநெல்வேலி மாவட்டம் வி.எம். சத்திரத்தைச் சேர்ந்த அ.பிரம்மா என்பவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பொதுத் தகவல் அலுவலருக்கு ஆர்.டி.ஐ. மூலம் விண்ணப்பித்து இருக்கிறார்.
மேலும் பல சமூக ஆர்வலர்கள் இப்படி ஆர்.டி.ஐ. மூலம் தகவல்கேட்டு விண்ணப்பிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இது பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.