அருள்மிகு நீலமணிநாத சுவாமி திருக்கோயில், கடையநல்லூர், திருநெல்வேலி மாவட்டம்.

குருக்ஷேத்திரப்போரில் வெற்றி பெற்ற அர்ஜுனன், வீரர்களைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக பொதிகை மலைக்கு சென்று, தாமிரபரணியில் நீராடி பாவம் போக்கிவிட்டு, படைகளுடன் திரும்பிக்கொண்டிருந்தார். அவர் இத்தலம் அருகே வந்தபோது, ஒரு மருத மரத்தின் அடியில் சற்று நேரம் ஓய்வு எடுத்தார். அப்போது, மகாவிஷ்ணு அவனது கனவில் தோன்றி, “தான் மருதமரத்தின் அருகில் ஓரிடத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டி, அவ்விடத்தில் இருக்கும் தன்னை வணங்கினால், பாவம் முழுமையாக நீங்கி விமோசனம் கிடைக்கும்” என்றார்.

விழித் தெழுந்த அர்ஜுனன், மகாவிஷ்ணு கூறிய இடத்திற்கு சென்றபோது, பெருமாள் தாயார்களுடன் சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். அவரை வழிபட்ட அர்ஜுனன், அந்த சுயம்பு மூர்த்திகளை (தானாகத் தோன்றியவை) பிரதிஷ்டை பூஜை செய்து வணங்கினார். பிற்காலத்தில், இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் இவ்விடத்தில் கோயில் எழுப்பினார்.

கருவறையில் நீலமணிநாத சுவாமி என்ற கரியமாணிக்கப்பெருமாள் ஸ்ரீ பூமி நீளா தேவியருடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். திருப்பதி வெங்கடாஜலபதியைப் போன்ற கோலத்தில் இவர் காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடிக்காணிக்கை செலுத்தி, நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.

திருமண, புத்திர தோஷம் இருப்பவர்கள் சுவாமிக்கு “கறிவேப்பிலை சாதம்” திருவோண நட்சத்திர தினத்தில் “பாயாசம்” நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் தோஷங்கள் நீங்குவதாக நம்புகின்றனர். அர்ஜுனன் வழிபட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு, “அர்ஜுனபுரி க்ஷேத்திரம்” என்ற பெயரும் உண்டு.

இக்கோயிலில் உள்ள சுதர்சனர் (சக்கரத்தாழ்வார்) தனிசன்ன தியில் 16 கைகளுடன் இருக்கிறார். இவரது பீடத்திற்கு கீழே இரண்டு சிங்கங்கள் சுவாமியையையும், அவருக்கு பின்புறம் இருக்கும் யோக நரசிம்மரையும் தாங்கியபடி இருக்கிறது. நரசிம்மருக்கு கீழே ஐந்து தலை நாகம் ஒன்றும் இருப்பது மற்ற இடங்களில் இல்லாத அதிசயம். சக்கரத் தாழ்வாரின் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. இவருக்கு சுதர்சனஹோமம் செய்து வழிபட்டால், பயம் நீங்கி, எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை.

பெருமாள் கோயிலாக இருந்தாலும், சிவ அம்சமான தெட்சிணா மூர்த்தியும் இங்கிருப்பது மற்றொரு சிறப்பான அம்சம். சுவாமியின் கருவறை விமானத்தின் தென்புறத்தில் இருக்கும் இந்த தெட்சிணாமூர்த்தி, மற்ற கோயில்களில் இருப்பது போல் அல்லாமல் இரண்டே சீடர்களுடன் இருக்கிறார். இவரது அமைப்பும் வித்தியாசமானது. மற்ற கோயில்களில் ஒரு காலை மடக்கி, ஒரு காலைத் தொங்கவிட்டு முயலகனை மிதித்தது போல் இருப்பார்.

இங்கோ, இடது கையை தரையில் ஊன்றி, ஒரு காலை ஐயப்பனுக்குரியது போல், மடக்கி வைத்து காட்சி தருகிறார். வலதுபக்கமாக முகம் வைத்திருக்க வேண்டிய முயலகன், இடது பக்கம் திரும்பியிருப்பது மற்றொரு சிறப்பம்சம். முன்மண்டபத்தில் பக்த ஆஞ்சநேயரும், அருகிலுள்ள ஒரு தூணில் வலது கையை மேலே தூக்கியும், இடது கையை மார்பில் வைத்தபடியுமான கோலத்தில் மற்றொரு ஆஞ்சநேயரும் உள்ளனர். இந்த இரட்டை ஆஞ்சநேயர்களை வணங்கினால், வேண்டிக் கொண்ட செயல்கள் நிறைவேறும் என்கிறார்கள்.

பிரகாரத்தில் மகாலட்சுமி, ஆண்டாள், விஸ்வக்ஷேனர் ஆகியோர்இருக்கின்றனர்.

திருவிழா:

சித்திரையில் பிரம்மோற்ஸவம்.

கோரிக்கைகள்:

திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமி, தாயாருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். பெருமாளுக்கு “கறிவேப்பிலை சாதம்” திருவோண நட்சத்திர தினத்தில் “பாயாசம்” நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர்.