ஐதராபாத்
இந்த ஆண்டு மே மாதம் தெலுங்கானாவில் 72 ஆம் உலக அழகி போட்டி நடைபெற உள்ளது.
வரும் மே மாதம் 10 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிவரை தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறும் இந்த ஆண்டுக்கான உலக அழகிப்போட்டிகளை தெலுங்கானா மாநில அரசு நடத்துகிறது. இந்த போட்டியை பிரபலப்படுத்தும் முன்னோட்ட நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணா ராவ் கலந்துக் கொண்டார்.
அப்போது அவர்,
”72-வது உலக அழகி போட்டி தெலுங்கானாவில் ஐதராபாத் உள்பட கலாசார முக்கியத்துவம் வாய்ந்த 10 நகரங்களில் நடைபெறும். இதற்கான செலவை தெலுங்கானா சுற்றுலாத்துறையும், மிஸ் வேர்ல்ட் நிறுவனமும் சமமாக ஏற்றுக்கொள்ளும். உலக அழகிப் போட்டி நடத்துவது மாநிலத்தின் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்கின்றன.
உண்மையில் இந்த போட்டியின் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் உயரும்.
உலக அழகிப் போட்டியை தெலுங்கானாவில் நடத்துவது வெறும் கவுரவப் பிரச்சினை அல்ல. உலகம் முழுவதும் பெண்களைக் கொண்டாட இது ஒரு வாய்ப்பு. அவர்களின் மன உறுதியை அங்கீகரிக்க இது ஒரு தெளிவான அழைப்பு.
என்று கூறி உள்ளார்.