சென்னை:  திருத்தணியில் புத்தாண்டையொட்டி நடைபெறும் திருப்புகழ் திருப்படி பூஜை விழாவையொட்டி திருத்தணிக்கு சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அறுபடைவீடுகளில் ஐந்தாம் படைவீடான திருத்தணி முருகன் கோயிலில், திருப்புகழ் திருப்படித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம்,  ஏராளமான பஜனை குழுவினர் ஒவ்வொரு படியிலும், பக்தி பாடல்களை பாடியவாறு மலைக்கோயிலுக்குச் சென்று முருகப் பெருமான வழிபடுவார்கள். இக்கோயிலில் முக்கிய விழாவாக ஓா் ஆண்டைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ள 365 திருப்படிகளுக்கு மலா்கள் வைத்து, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து பக்தா்கள் பூஜைகள் செய்து முருகப் பெருமானை வழிபடும் விழா திருப்புகழ் திருப்படி திருவிழாவாகும்.

அப்போது மலையின் கீழே இருந்து மேல் உள்ள பிரகாரம் வரை உள்ள  ஒவ்வொரு படிக்கும் பக்தர்கள் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றியவாறு மலைக்கோயிலுக்குச் செல்வார்கள்.

இந்த நிலையில், நடப்பாண்டு  புத்தாண்டு பிறப்பதையொட்டி, நாளை ( டிசம்பா் 31) இரவு திருப்புகழ் திருப்படி திருவிழாவும், ஜனவரி 1-இல் புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடைபெற உள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி இ நிகழாண்டிற்கான திருவிழா வரும் 31- ஆம் தேதி காலை 8 மணிக்கு சரவணப் பொய்கையில் தொடங்குகிறது. காலை 11 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி மலைக்கோயில் மாடவீதிகளில் ஒருமுறை வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.

இதன் காரணமாக, மாலை 4 மணி முதல் ஜனவரி 1-ஆம் தேதி இரவு 9 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். இந்த நேரத்தில் பக்தா்கள் தொடா்ந்து கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் 31-ஆ ம் தேதி காலை 11 மணி முதல் மலைக்கோயில் வளாகத்தில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் உதவி ஆணையா் விஜயா மற்றும் கோயில் அலுவலா்கள் செய்து வருகின்றனா்