சென்னை

விசிக தலைவ்வர் திருமாவளவன் பாஜகவுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் பாடம் புகட்டி உள்ளதாகக் கூறியுள்ளார்.

இன்று நடைபெறும் ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஹரியானாவில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக அங்கு ஆட்சியை பிடிக்கிறது. -ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

இத்தேர்தல் முடிவுகள் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் எம்பி  ஒரு தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்.

“ஜம்மு காஷ்மீரில் நாம் எதிர்பார்த்தது போல இந்தியா கூட்டணி, தேசிய மாநாட்டு கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய பாடத்தை ஜம்மு காஷ்மீர் மக்கள் புகட்டி உள்ளார்கள். அதேபோல ஹரியானாவில் நாம் வெற்றி பெறவில்லை. கருத்துக்கணிப்புகளும் சொன்னது போல நடக்கவில்லை.

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் சிதறி போய் தனித்தனியாக நின்றதால் வாக்குகளும் சிதறிப் போய்விட்டன. இனி வரும் மாநில சட்டசபை தேர்தல்களில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு பாடம்.

ஹரியானாவில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்றால் கூட, வலுவான எதிர்க்கட்சி அங்கே உருவாகியுள்ளது. பிற கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இருந்தால், பாஜகவின் வெற்றியை தடுத்திருக்க முடியும். மக்கள் அதற்கு தயாராக இருந்தால் கூட, சில அரசியல் கட்சிகள் அதற்கு தயாராக இல்லை. காங்கிரஸ் பிற கட்சிகளை ஒருங்கிணைப்பதில் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்.

அகில இந்திய அளவில் இளைஞர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க முன்வருகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில்100 இடத்தில் வெற்றி பெற்றதும், வாக்கு சதவீதத்தை அதிகரித்ததும் அதற்கு ஒரு சான்று”

என்று கூறி உள்ளார்.