மதுரை: மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் இல்லை, இதுபோன்ற தூண் சமண மலையிலும் உள்ளது என்றும் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை வாதம் செய்தது.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்த, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (டிசம்பர் 15) 2வது நாளாக நடந்து வருகிறது.

மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த ராம ரவிகுமார் தொடுத்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறைவேற்றாததால், ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை. பிற மனுதாரர்கள் உட்பட, 10 பேரை மனுதாரர் அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை அனுப்ப உயர்நீதிமன்ற சி.ஐ.எஸ்.எப்., கமாண்டன்டிற்கு உத்தரவிடுகிறேன்’ என்றார்.
இதையடுத்து, நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட் மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் இரு நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த வாரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் 2வது நாளாக மீண்டும் விசாரணை நடைபெற்றது.
இன்றைய விசாரணையின்போது,அறநிலையத்துறை சார்பில் அரசு வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. தனி நீதிபதி உத்தரவிட்ட தூண் போன்று சமண மலையிலும் உள்ளது என்றும் தெரிவித்தது. மேலும், 100 வருடங்களாக உச்சிப்பிள்ளையார் கோயிலில் தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இது சரியான இடம் என்று அர்ச்சகர் உறுதி செய்துள்ளார். அறங்காவலர் குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பின் ஏன் இது போன்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும்? என கூறினார்.
கோவில் தேவஸ்தானம் சார்பில் ஆஜரான வக்கீல் பல ஆண்டுகளாக உச்சிப் பிள்ளையார் கோவில் அருகில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. கோவிலின் பழக்கவழக்கங்களை மாற்ற தனிநபர் கூறியுள்ளார். இதில் அவருக்கு எந்த உரிமையும் இல்லை. மலைமீது விளக்கு ஏற்றுவது வேறு, வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பது வேறு. தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோவில் நிர்வாகத்தை கட்டாயப்படுத்த முடியாது. கோவிலின் பராமரிப்பு அடிப்படை திட்டங்களை நிறைவேற்றும் கடமை அரசுக்கும் அறநிலைய துறைக்கும் தான் உள்ளது. கடைசியாக நூறு ஆண்டுகளுக்கும் மேல் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நடைமுறை ஆகம விதிப்படிதான் நடந்து வருகிறது என்றவர், இந்த நடைமுறையை பாரம்பரிய நடை மற்றும் வழக்கமான நடைமுறையாகும்.
தனி நீதிபதி இந்த விவகாரத்தில் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து உள்ளார். கோவில் நிர்வாகத்தில் உயர் நீதிமன்றங்கள் நேரடியாக தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கடந்த 2021 ஆம் ஆண்டு தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது. இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் உரிமையியல் நீதிமன்றத்தில் தான் வழக்கு தாக்கல் செய்து அதற்கான தீர்வை பெற முடியும். திருப்பதி தேவஸ்தானத்தில் கூட ஆகம விதிகளை மீறி எதையும் செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஆகம விதிகளை மீறி புதிய பழக்கங்களையும் நடைமுறைகளையும் நிறைவேற்றும் போது பல தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டியது அவசியம். இந்த நடைமுறைகளை எல்லாம் தனி நீதிபதி இந்த வழக்கு விசாரணையின் போது கருத்தில் கொள்ளவில்லை. அர்ச்சனை மற்றும் பூஜையின் போது தனிநபர் தலையீடு இருக்கக்கூடாது அதுபோல தீபம் ஏற்றும் விவகாரத்திலும் ஆகம விதிகள் பொருந்தும் என்று வாதாடினார்கள்.
அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள் திருப்பரங்குன்றம் கோவிலில் அறங்காவலர் குழு செயல்பாட்டில் உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அறநிலையத்துறை வக்கீல் ஆஜராகி கோவில் அறங்காவலர்கள் குழுவினர் கோவில் மீது பற்று இல்லாதவர்களை போல சித்தரிக்கப்படுகின்றனர் என்றார்.
பின்னர் 1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறை சார்பில் நாகசுவாமி எழுதிய புத்தகத்தை நீதிபதிகள் முன்பு சமர்ப்பித்தனர். அந்தப் புத்தகத்தில் கார்த்திகை தீபம் குறித்து தெளிவாக கூறியுள்ளார். மலையடிவாரத்தில் இருந்து பாதி வழியில் இறங்கி சென்றால் தீபத்தூண் ஒன்று இருப்பதை காணலாம். நாயக்கர் கால தீபத்தூண் அந்த தீபத்தூன் அனுமன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆண்டவனின் தலை மீது உள்ள தூண் என அதை மக்கள் நினைக்கின்றனர். அங்கு விளக்கேற்றினால் நன்மை நடக்கும் என கூறப்படுவதாக அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அந்த தூண் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் இருக்கும் தூண் தான் என்றும் அறநிலையத்துறை வக்கீல்கள் வாதாடினர்.
[youtube-feed feed=1]