சென்னை: ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’  நிதி நிறுவனம் நடத்தி வந்த தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிதி நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க மயிலாப்பூரில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு பாதிக்கப் பட்டவர்கள் ஆவணங்களுடன் வந்து புகார் அளிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் 150 ஆண்டுகள் பழமையான ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5,000-க்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத் தொகை கொண்ட உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிதி நிறுவனம், முதலீடு செய்யும் பணத்துக்கு அதிகளவில் வட்டி அளிப்பதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் சுமார் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக, இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டித் தொகையும், முதிர்வுத் தொகையும் வரவில்லை என்ற புகார் எழுந்தது. மேலும், 150-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்கள் மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்தில் அவ்வப்போது திரண்டு முறையிட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் எழுத்துபூர்வமாக புகார் அளித்தனர். அதன்பேரில்  பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்   போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்,

முன்னதாக, ஒரே நேரத்தில் அதிகமான வாடிக்கையாளர்கள் திரண்டு தங்களின் பணத்தைக் கேட்டு வந்ததால் நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்ததாக அந்த நிதி நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்ட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அடிதயடுத்து, அந்த நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ள தேவநாதன் யாதவ் கடந்த ஆகஸ்டு மாதம், 13ந்தி அன்று காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டார். இவர் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவராகவும் உள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.