புதுச்சேரி: உடல்நலம் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி. சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்பட அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், எம்.பி.யுமான வசந்தகுமார் மறைவை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

என்னுடன் நெருங்கி பழகியவர். எப்போதும் சுறுசுறுப்பானவர். தனது உழைப்பால் உயர்ந்தவர். உழைப்புக்கு உதாரணமாக இருந்தவர். தமிழகத்தில் சிறந்த வர்த்தகராக இருந்தவர். அரசியலில் வர்த்தகத்தை ஒருபோதும் அவர் கலந்ததில்லை.

தனது உழைப்பால் எம்.எல்.ஏ., எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர். அவரது இழப்பு மிகப்பெரிய பேரிழப்பு. தமிழகத்தில் தென்மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியை வலுவாக வளர்த்தவர். அவர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.