சென்னை: சென்னையில் போலியான ஆவணங்கள் மூலம்  ஒருவருடைய அடுக்குமாடி வீட்டை அபகரித்த வழக்கறிஞரிடம் இருந்து, 48 மணி நேரத்தில் வீட்டை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கவும், வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கவும்  காவல்துறைக்கு  சென்னை உயர் நீதிமன்றம்  அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான வழக்கறிஞர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதிலும, வீட்ட வாடகை, வீடுகள் காலி செய்வது மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக  செயல்படுவதில்  மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். இதை உறுதி செய்யும் வகையில், சமீபத்தில்  சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் 6 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது வழக்கறிஞர் தொழிலுக்கே இழுக்கை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், போலியான ஆவணங்கள் தயாரித்து வாடகைக்கு இருந்த வீட்டை அபகரித்த வழக்கறிஞரை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் மாநகர காவல்துறைக்கு உத்தரவிட்டு உள்ளது.

முன்னதாக   சென்னையைச் சேர்ந்த மாதவன் என்பவர்  தாக்கல் செய்த மனுவில், “நந்தனம் சிஐடி நகரில் உள்ள  அடுக்குமாடிக் குடியிருப்பில் அமர்நாத் என்ற வழக்கறிஞர், வீடு குத்தகைக்கு ஒப்பந்தம் செய்து குடியிருந்து வந்தார். அவருடனான ஒப்பந்த காலம் முடிந்த பின் வீட்டை காலி செய்து கொடுக்காமல் மிரட்டி வருகிறார். மேலும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள  மற்ற வீடுகளையும் அபகரித்து வாடகை எதுவும் கொடுக்காமல் இருந்து வருகிறார்.

இது தொடர்பாக பார் கவுன்சில் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு பார் கவுன்சில் ஆகியவற்றில் புகார் அளித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை நடத்திய  சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், சிவஞானம்  அமர்வு விசாரித்து. விசாரணையின் போது, வழக்கறிஞர் அமர்நாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வீடு குத்தகைக்கான ஆவணங்களின் உண்மைத் தன்மை குறித்து விசாரணை நடத்த சைதாப்பேட்டை உதவி ஆணையருக்கும், தடய அறிவியல் துறைக்கும் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்பும் வழக்கறிஞர் அமர்நாத் வாடகை ஏதும் கொடுக்காமல் இருந்து வருவதாகவும்,  மனுதாரரான  மாதவனின் வீட்டை வழக்கறிஞர் அபகரித்து வைத்திருப்பது உறுதியாகி இருப்பதாகவும்  தெரிவித்தார்.

மேலும் வழக்கறிஞர், அமர்நாத் நீதிமன்றத்தில் வழங்கிய வீடு குத்தகை எடுத்ததற்கான ஆவணம், அதிலிருந்த கையெழுத்து என அனைத்தும் போலியானது எனத் தெரிய வந்ததாகவும் தடய அறிவியல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கறிஞர் அமர்நாத் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து அவரை கைது உடனே  நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டதோடு, தமிழ்நாடு பார் கவுன்சிலும் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

மேலும், வழக்கறிஞர் அமர்நாத்திடம் இருந்து வீட்டை 48 மணி நேரத்தில்து மீட்டு வீட்டின் உரிமையாளர் மாதவன் வசம் ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.