சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள், வரும்  10, 11ந்தேதி தமிழகத்தில் முகாமிடுகின்றனர். அப்போது, தேர்தல் தேதி அறிவிப்பது தொடர்பாக, தமிழக அரசியல் கட்சியினர் மற்றும் தலைமைச்செயாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 3 மாதங்களில் நடைபெற உள்ளது.  மே மாதம் 3வது வாரம் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும் என்பதால், அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.  இதையொட்டி, தமிழகத்தில் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. ஏற்கனவே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக  234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் அதிகாரி தலைமையிலான குழுவினர் வரும் 10ந்தேதி தமிழகம் வருகை தருகின்றனர். 2 நாள் சென்னையில் முகாமிடும் அவர்கள், தேர்தல் தேதி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.